
மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது!
மேற்கு வங்க இடைத்தேர்தலில் மமதா பானர்ஜி ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கைது...

நந்திகிராம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் - மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி - கோப்புப் படம்
மேற்கு வங்க இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி ஆதரவளித்த சில மணிநேரங்களில் காங்கிரஸ் கட்சியின் நந்திகிராம் தொகுதி வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் இன்று (செப். 18) முடக்கியது.
வரும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு மமதா பானர்ஜி தலைமையிலான அணிக்கு ‘மமதா அனைத்திந்திய திரிணமூல் காங்கிரஸ்’ எனும் பெயரும், கால்பந்து வீரர் சின்னமும் ஒதுக்கப்பட்டன.
இத்துடன், மமதா அணியின் சார்பில் நந்திகிராம் தொகுதியின் இடைத்தேர்தலில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் சஞ்சிதா பிரதான் டே தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுள்ளார். முதல்வர் சுவேந்து அதிகாரியுடனான சந்திப்புக்குப் பிறகு அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு மமதா பானர்ஜி இன்று (செப். 18) தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மமதா பானர்ஜி ஆதரவு அளித்த சில மணிநேரங்களில் நந்திகிராம் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான், கடந்த 2007 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தலுக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் கைது செய்யப்பட்டது மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை அரசியல் நோக்கமுடையது என அம்மாநில காங்கிரஸ் கமிட்டி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுபற்றி, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சுபங்கர் சர்கார் கூறுகையில்,
“இன்று திடீரென ஒரு வழக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநிலத்தில் ஒரே கட்சியின் ஆட்சியை அமல்படுத்த பாஜக விரும்புகிறது. நாட்டில் எதிர்க்கட்சிகள் இருக்கக் கூடாதா? மிலனின் கைது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நந்திகிராம் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், காலியாகவுள்ள நந்திகிராம் தொகுதிக்கு வரும் அக்.6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Congress candidate for the Nandigram constituency by-election was arrested after receiving support from former CM Mamata Banerjee.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








