
இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்துவரும் நண்பர் ஒருவர் என்னிடம் தொலைபேசியில் ஒரு கேள்வி கேட்டார். ‘நீங்கள் எழுதுவது எல்லாம் வழிமுறைகளாக இருக்கின்றன. அதை எல்லாம் கடைப்பிடித்தால் நூற்றுக்கு நூறு வரும் என்பதும் புரிகிறது. ஆனால் அதைப் படித்தால் நாம் ஆசைப்படுவதே கூடாதோ என்பதுபோல ஒருவிதமான கண்டிப்பு தெரிகிறதே..’
அவர் வீட்டில் பள்ளி இறுதியாண்டு படிக்கும் மகளும், கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மகனும் இருக்கிறார்கள். அவர்களுடன் பேசிவிட்டு அவர்கள் கருத்தைத்தான் முன் வைக்கிறார் என்பதையும் பேச்சினூடே சொன்னார். அந்தக் கேள்விக்கு இன்றைய பதிவில் விடை கிடைக்கும்.
ஆசைகளைத் தெரிந்துகொள்வதும், அதை சீரமைப்பதும் மிகவும் அவசியமான பழக்கம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆசைகளை பொதுவாக மூன்றாக வகைப்படுத்தலாம். உடல் சார்ந்த ஆசைகள், மனம் சார்ந்த ஆசைகள், உதவி சார்ந்த ஆசைகள். இது இல்லாது உலகில் எதுவுமில்லை. புகழ் பெற்ற கபீர் சொல்லுவார். ‘மனிதகுலத்தில் செல்வமும் இன்பமும் சேர்வதன் மூலமே ஆசைதான்’. ஆகவே, ஆசை தவறு இல்லை என்பதை உணர்ந்துகொண்டு நாம் மேலே சிந்திக்கலாம்.
அது வேண்டும் இது வேண்டும்; அதைச் செய்து முடிக்க வேண்டும்; இதை அடைய வேண்டும் என்பதெல்லாமே ஒரு வகையான ஆசைதான். ஆனால், இவையெல்லாம், ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து அடங்கி மீண்டும் எழுந்து அடங்கும் மனம் கொண்டவர்களுக்கு மிகவும் குழப்பமான வாழ்க்கை, அதிலும் உணர்ச்சி சார்ந்து முடிவு எடுப்பதில் சிக்கல் கொண்ட வாழ்க்கையாக அமையும் என்பதால் ஆசைகள் குறித்துத் தெரிந்துகொள்வது அவசியமானதுதானே!
மனிதருக்கு ஆசைகள், எப்போதும் ஒன்றன் பின் ஒன்றாக உருவாகிக்கொண்டேதான் இருக்கும். ஆசைகள் மறைவதில்லை; ஆனால் மாறுகின்றன. ஒரு ஆசையை இன்னொரு ஆசையின் மூலம் வெல்லமுடியும் என்பதே ஆசையை சீரமைப்பதன் முதல் படிப்பினை. இதைத் தெரிந்துகொண்டால்தான், அவசியமில்லாத ஆசையைக் கைவிடவும், அவசியமான ஆசையைத் தொடர்ந்து அது தூண்டும் இலக்கை அடையவும் முடியும்.
மூன்றுவிதமான ஆசைகள் என வகைப்படுத்தியிருந்தாலும், உளவியலாளர்கள் அதனை மேலும் ஆராய்ந்து ஒரு பட்டியல் தந்துள்ளனர். அவற்றையெல்லாம் பெற்று பெருவாழ்வு வாழ்வதே நூற்றுக்கு நூறு.
ஆசைகளே நம்மை வடிவமைக்கின்றன. ஆசைகளே பலமுறை நம் அடையாளமாகின்றன. ஆசைகளே நம்மை ஊக்குவிக்கின்றன. ஆசைகளே நம்மை முந்தித் தள்ளுகின்றன. ஆசைகளே நம்மை உயர்த்துகின்றன. ஆசைகளே நம்மை வீழ்த்தவும் செய்கின்றன. ஆசைகளே நம் தேவைகளை நிர்ணயிக்கின்றன. அதனின் நம் தேவைகளே ஆசையாகின்றன.
ஆசை அவசியம். அது மிகவும் அவசியம். அதனைச் சரியாகப் புரிந்து செயல்படுத்துவதே நூற்றுக்கு நூறு பெறும் வழி.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.