6. பாத்திரமறிந்து பணம் போடு

ஒரே திட்டத்தில் மொத்தப் பணத்தையும் முதலீடு செய்யாமல், பல திட்டங்களில் பிரித்து முதலிடுவதே புத்திசாலித்தனமானது. அதிலும் ஒரு நியதி இருக்கிறது.

ஒரே திட்டத்தில் மொத்தப் பணத்தையும் முதலீடு செய்யாமல், பல திட்டங்களில் பிரித்து முதலிடுவதே புத்திசாலித்தனமானது. அதிலும் ஒரு நியதி இருக்கிறது. மனம்போன போக்கில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யாமல், முதலீட்டு வகைகளின் தன்மைகளை அறிந்து அவற்றுக்கேற்ப முதலீடு செய்வதே அது. இவ்வாறாக முதலீட்டு வகைகளின் தன்மைகளை அறிவதுதான் பாத்திரம் அறிதல்.

‘பாத்திரமறிந்து பிச்சை போடு’ என்றொரு பழமொழி உண்டு. இதன்பொருள், பிச்சைக்காரர் கையில் வைத்திருக்கும் பாத்திரத்தைப் பொருத்து அவருக்குப் பிச்சை போடு என்பதல்ல. அவரது குணநலன் என்ற பாத்திரம் – கேரக்டர் – அறிந்து அவருக்கு தானம் வழங்கு என்பதே இதன் உட்பொருள். குடிப்பழக்கம் உள்ள சிலர், குடிப்பதற்குப் பணம் இல்லாதபோது, நமது இரக்கத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு பொய்களைப் பேசி கடனாகவோ, கைமாற்றாகவோ பணம் கேட்பதைப் பார்த்திருப்பீர்கள், அனுபவப்பட்டிருப்பீர்கள். இந்தக் கடன், பெரும்பாலும் பாழும் கிணற்றில் போட்டதற்குச் சமம். இதேபோல் பல்வேறு பொய்க் கதைகளைக் கூறி பிச்சை கேட்போரும் உண்டு. ஆகையால், கேட்பவரின் குணநலனை அறிந்து அதற்கேற்ப தானம் கொடுக்க வேண்டும்.

நமது கையை விட்டுப் பணம் போகும் பிச்சை இடுவதற்கே குணநலன் பார்க்க வேண்டும் எனில், நமது சேமிப்பை இட்டு கூடுதல் லாபத்துடன் திரும்பப் பெற விரும்பும் முதலீடுகளுக்கு, குணநலன் பார்க்க வேண்டாமா? இதனை ‘தெரிந்து செயல் வகை’ என்ற அதிகாரத்தின் கீழ் உள்ள குறள் ஒன்று, தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல். (461)

எந்தவொரு செயலைத் தொடங்குவதற்கும் முன்பு, அதனால் அழியவிருப்பவை என்ன, புதிதாக ஆக இருப்பவை என்ன, அவ்வாறு ஆன பின்பு நமக்குக் கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன ஆகியவற்றைத் தீர ஆராய்ந்து, அதன் பிறகே அச் செயலில் இறங்க வேண்டும் என்பது இதன் பொருள். இது முதலீட்டுக்கும் மிகவும் பொருத்தமானதுதானே!

இந்த இடத்தில் அழிவது என்பது, நமக்குத் தீமை தரும் வகையில் ஏற்படக்கூடிய இழப்பு என்ற பொருளைத் தாங்கி நிற்கவில்லை. குறிப்பிட்ட ஒன்றின் ஆக்கத்துக்காக நாம் எவ்வளவு செலவழிக்கிறோம், நம்மிடமிருந்து எவ்வளவு பொருள் அல்லது பணம் செலவாகப்போகிறது என்ற பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக, குறிப்பிட்ட திட்டத்துக்காக எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். அதன்மூலம் ஆகக்கூடிய முதலீட்டுத் திட்டம் என்ன, அதன் தன்மை என்ன என்பதையும் ஆராய வேண்டும். இவ்வாறு முதலீடு செய்த பிறகு அதனால் நமக்குக் கிடைக்கக்கூடிய லாபம், வட்டி உள்ளிட்ட பலன்கள் என்ன என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறாக, ஒவ்வொரு முதலீட்டுத் திட்டத்தையும் - தனித்தனியே அதனால் முதலில் நம்மிடமிருந்து கைவிட்டுப் போகக்கூடிய தொகை எவ்வளவு, அத் திட்டத்தால் ஆகக்கூடிய செயல் எத்தன்மை வாய்ந்தது, இந்த முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் பலன் என்ன ஆகிய மூன்றையும் ஆராய்ந்து முதலீட்டைத் தொடங்க வேண்டும்.

மேற்கண்ட குறளில் குறிப்பிடப்பட்ட அழிவது என்பதை நேர்மறைக் கண்ணோட்டத்துடன் பார்த்தோம். இதையே எதிர்மறைக் கண்ணோட்டத்துடன், நமது முதலுக்கு அழிவை ஏற்படுத்திவிடக்கூடிய திட்டமாக இருக்குமோ என்ற ஐயத்தின் பேரிலும், சந்தேகத்தைப் போக்கிக்கொள்ளும் வகையில் ஆய்வு செய்து பார்க்கலாம், தவறில்லை. ஏனெனில், சில முதலீட்டுத் திட்டங்கள் நமக்குக் கூடுதல் வட்டி, இலவசப் பொருள்கள் என்று ஆசை காட்டலாம். அந்த ஆசை காட்டல்கள், தங்கள் வசம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் வழக்கமான நடவடிக்கைகள்தானா அல்லது ஆபத்து மறைந்திருக்கிறதா என்பதைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

சிறிய வயதில் இருந்தே நம்மிடம், “நல்ல நண்பர்களோடு சேர் நல்லது கிடைக்கும், தீய நண்பர்களோடு பழகாதே தீமை விளையும்” என்று நமது பெற்றோரும் பெரியோர்களும் சொல்லி வருவார்கள். இது மிகச் சிறந்த அறிவுரை. இதேபோன்ற அறிவுரையை ‘சிற்றினம் சேராமை’ என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.

நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்

அல்லல் படுப்பதூஉம் இல். (460)

நல்லினம் என்பது, நல்ல இயல்புடைய நண்பர்கள், நன்மை தரக்கூடிய இயல்புடைய விஷயங்கள் என அனைத்தையும் குறிக்கும். இதேபோல் தீயினம் என்றால் தீமைக் குணம் கொண்ட நண்பர்கள், தீமை தரக்கூடிய இயல்புள்ள விஷயங்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். உலகில் நமக்கு நல்ல இனத்தைப் போன்ற துணை வேறு எதுவும் இல்லை; அதேபோல் தீய இனத்தைவிட நமக்குத் தீமை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை என்று திருக்குறள் கூறுகிறது. முதலீட்டை எடுத்துக்கொண்டால், நல்ல இயல்புகளை உடைய திட்டங்களில் முதலீடு செய்தால் அதனைப்போல் நமக்குத் துணைபுரிவது வேறு எதுவும் இருக்க இயலாது; மாறாக, தீய இயல்புடைய திட்டங்களில் தெரியாமல் முதலீடு செய்துவிட்டோமென்றால் அதைவிட நம்மைத் துயரப்படுத்துவது வேறு எதுவும் இருக்க முடியாது.

ஆகையால், குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டம் எந்த வகையைச் சார்ந்தது, அதற்குத் தேவைப்படும் பணம் நம்மிடம் இருக்கிறதா, இல்லையேல் எளிதில் திரட்டிவிட முடியுமா, அந்த முதலீட்டுத் திட்டத்தின் முடிவில் அல்லது இடைவழியில் நமக்குக் கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன ஆகிய அனைத்தையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். இவற்றில் மனமயக்கும் திட்டங்களையும், சந்தேகத்துக்கு இடமான திட்டங்களையும் நீக்கிவிட வேண்டும். நல்ல தன்மை உடைய திட்டங்களைத் தேர்ந்து எடுத்து முதலீடு செய்ய வேண்டும்.

அவ்வாறு முன்கூட்டியே தீர ஆராய்ந்து பார்க்காமல், இந்தத் திட்டம் நன்றாக இருக்கும் என்ற தவறான நம்பிக்கையாலோ அல்லது அறியாமையாலோ நாம் முதலீடு செய்தால் நமக்கு இழப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதனை ‘தெரிந்து செயல் வகை’ அதிகாரத்தில் உள்ள கீழ்க்கண்ட குறள் எச்சரிக்கிறது.

நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை. (469)

நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு, அவர் அவர் பண்பு அறிந்து ஆற்றாக் கடை என்று இதனைப் பிரித்துப் படிக்க வேண்டும். ஒருவருடைய இயல்பை அறிந்துகொள்ளாமல் அவருக்கு நன்மை செய்தாலும்கூட அது தவறாகப் போய்விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது இதன் பொருள். முதலீடுகளும் அப்படித்தான். அவற்றின் தன்மையை அறிந்துகொள்ளாமல், முதலீடு செய்வது நல்லதுதானே என்று பொத்தாம்பொதுவான நினைப்பில் பணத்தைப் போட்டோம் எனில், அது தவறாகப் போய்விடுவதற்கும், நமக்கு இழப்பு ஏற்பட்டுவிடுவதற்கும் அது காரணமாகிவிடும்.

இவ்வாறு குணநலன்களை ஆராய்ந்து முடிவெடுப்பதைத் தடுப்பது பலரிடம் உள்ள பேராசை. அதிக ஆசை கண்ணை மறைத்து, அதலபாதாளத்தில் வீழ்த்திவிடும். ஆசைப்படுவதற்கும் ஓர் அளவு இருக்கிறது, அதைத் தாண்டி பேராசைப்பட்டால் ‘உள்ளதும் போச்சு’ என்கின்ற கதைதான். அதிக வட்டி தருவதாகக் கூறும் நிதி நிறுவனங்கள், தேக்கு மர முதலீடு போன்ற திட்டங்களில் பெருமளவு பணத்தைச் செலுத்திவிட்டு பிறகு “அய்யோ என் மகள் திருமணத்துக்காகச் சேர்த்து வைத்திருந்த பணம்”, “ஓய்வுக் காலத்துக்காகச் சேர்த்து வைத்த பணம்” என்று அழுது புலம்புவோர் உண்டு. இதுபோன்றவர்களுக்காகத்தான், ‘வலி அறிதல்’ அதிகாரத்தின் கீழ் ஒரு குறளில் எச்சரிக்கை விடுகிறார் திருவள்ளுவர்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின். (475)

பீலி என்றால் மயில் தோகை. சாகாடு என்றால் வண்டி. மயில் தோகை மிகவும் மெல்லியது. அப்படிப்பட்ட மயில் தோகையே ஆனாலும், அளவுக்கு மேலாக அவற்றை வண்டியில் ஏற்றினால், அந்த வண்டியினுடைய சக்கரத்தின் அச்சு இற்றுப்போகும் அதாவது முறிந்துபோகும். ‘அளவுக்கு விஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழியும் இதனைத்தான் குறிக்கிறது. ஆகையால், அளவுக்கு மேல் பேராசைப்படக் கூடாது. நமது கண்களை மறைக்கும் அந்தப் பேராசையையும், நமது கண்களைச் சரியாகப் பார்க்கவிடாமல் கூசச் செய்யும் கவர்ச்சி மயக்கங்களையும் விலக்கிவிட்டு முதலீட்டுத் திட்டத்தை தீர ஆராய வேண்டும்.

சிலருக்கு நன்கு ஆராய்ந்து பார்க்கக்கூடிய அறிவு இருக்கும், பேராசையும் இருக்காது. ஆனாலும் முதலீட்டுத் திட்டங்களை ஆராய்ந்து பார்க்காத தவறைச் செய்வார்கள். அதற்குக் காரணம், “எனது உறவினர் கூறினார், நெருங்கிய நண்பர் கூறினார்” என்பதாக இருக்கும். யார் என்ன கூறினாலும் முடிவு எடுப்பது நம்மிடம்தான் இருக்கிறது. ‘தாட்சண்யம் தனநாசம்’ என்றொரு மூதுரை உண்டு. சிலரிடம் தயவு காட்டினோம் எனில், நம்முடைய செல்வத்துக்கு அது இழப்பாய் முடியும் என்பது இதன் பொருள். முதலீட்டைப் பொருத்தவரை இது நூற்றுக்கு நூறு உண்மை. உறவினர், நண்பர் என்ற காரணத்துக்காக இவர் நன்றாகத்தான் செய்வார் என்ற நம்பிக்கையில், திட்டங்கள் குறித்து எந்தக் கேள்விகளும் கேட்டு அறிந்துகொள்ளாமல் சிலர் முதலீடு செய்துவிட்டு, பிறகு முதலீட்டை மட்டுமின்றி முந்தைய உறவையும், நட்பையும் இழந்துவிடுகின்ற துயரங்களையும் அனுபவிப்பதுண்டு. இவர்களுக்காகவே ‘தெரிந்து வினையாடல்’ அதிகாரத்தில் இக்குறளை உரைத்துள்ளார் பொய்யாமொழிப் புலவர்.

அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்

சிறந்தானென் றேவற்பாற் றன்று. (515)

அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று என்று படிக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் இந்த நபர் நன்கு அறிந்து, வழியில் ஏற்படும் இடையூறுகளைக் களைந்து, சிறப்பாகச் செய்துமுடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்க்காமல், இந்தச் செயலைச் செய்வதில் இவர் வல்லவர் என்று குருட்டுத்தனமாக எண்ணி அவரிடம் செயலை ஒப்படைக்கக் கூடாது என்பது இக்குறளின் பொருள். ஆகையால், ஒருவரிடமோ அல்லது ஒரு திட்டத்திலோ நாம் வைக்கும் நம்பிக்கை குருட்டுத்தனமாக இருக்காமல், நன்கு ஆராய்ந்து வைக்கப்பட்டுள்ள திட நம்பிக்கையாக இருப்பதே முதலீட்டுக்கு நல்லது. அந்தவகையிலும் முதலீட்டாளர்கள் பாத்திரத்தை அறிய வேண்டும்.

நமக்கு வெளியே உள்ள முதலீட்டுத் திட்டங்கள், அதுசார்ந்த முகவர்கள், நிறுவனங்கள், அறிமுகப்படுத்துவோர் ஆகிய வெளிக் காரணிகளில் மட்டுமல்ல, நமக்கு உள்ளேயும் இருக்கின்ற குணநலன் என்ற உள் காரணியான பாத்திரத்தையும் முதலீட்டாளர்கள் அறிந்துகொண்டு முதலீடு செய்ய வேண்டும். சிலருக்குப் பணப்புழக்கம் மிகுதியாக இருக்கும், வேறு சிலருக்கு இருக்காது. சிலருக்குப் பொறுமை அதிகம் இருக்கும், வேறு சிலருக்கு இருக்காது. சிலருக்கு அலைந்து திரிந்தாலும் அசதி ஏற்படாது, வேறு சிலருக்கு அப்படியல்ல. இதுபோல் குணநலன்களில் மாறுபாடு இருக்கிறது. ஆகையால், ஒருவருக்கு சிறப்பாக அமைகின்ற ஒரு முதலீட்டுத் திட்டம் வேறு ஒருவருக்கு கஷ்டத்தையோ, குழப்பத்தையோ, சஞ்சலத்தையோ ஏற்படுத்திவிடலாம். எனவே, குறிப்பிட்ட ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு அதன் குணநலனை மட்டுமின்றி, அதில் முதலீடு செய்கின்ற தனது குணநலனையும் ஒருவர் ஆராய்ந்து பார்த்து முதலீடு செய்வது நல்லது. இதற்கும் பொருத்தமான ஒரு குறள், ‘தெரிந்து வினையாடல்’ அதிகாரத்திலேயே உள்ளது.

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர். (514)

என்னதான் ஆராய்ந்து முடிவெடுத்தாலும்கூட, அதனைச் செயல்படுத்துகின்ற விதத்தில் மாறுபடுகின்ற மனிதர்கள் பலர் இந்த மண்ணுலகில் உண்டு என்பது இதன் பொருள். முதலீட்டாளர்களைப் பொருத்தவரை, ஒருவரிடமுள்ள பணப் புழக்கம், காத்திருக்கும் குணம், அவரது தேவை, குடும்பச் சூழல், இடர்களை எதிர்கொள்ளும் துணிவு உள்ளிட்டவை அவர் செயல்படும் விதத்தைத் தீர்மானிக்கின்றன அல்லது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஆகையால், முதலீட்டிலும்கூட ரிஸ்க் எனப்படும் இடர்களை எதிர்கொள்வதற்கு ஏற்ற பணமும், துணிவும் உள்ளவர்கள் அதற்கேற்ப, ரிஸ்க் இருந்தாலும் ரிவார்டு (பயன்கள்) அதிகம் கிடைக்கும் திட்டங்களில் கூடுதலாக முதலீடு செய்யலாம். பங்குச் சந்தை, பண்டகச் சந்தை, யூலிப் திட்டங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மற்றவர்கள், இடர்கள் குறைவான பாதுகாப்பான திட்டங்களில் – அதாவது அரசு கடன்பத்திரங்கள், உத்தரவாதமான கடன்பத்திரங்கள், பொதுத் துறை வங்கிகள் அல்லது நிறுவனங்களின் டெபாசிட் திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதித் திட்டங்கள் போன்றவற்றில் – அதிக அளவு முதலீடு செய்வதே சிறந்தது.

ஆக, முதலீட்டுத் திட்டங்களின் தன்மை, அதுசார்ந்த நிறுவனங்கள் அல்லது அமைப்புகளின் இயல்பு, முதலீடு செய்கின்ற நபரின் குணநலன் ஆகியவற்றை ஆராய்ந்தறிந்து, அதற்கேற்ப பல்வேறு திட்டங்களில் பணத்தைப் பிரித்து முதலீடு செய்வதே அதிபுத்திசாலித்தனமானது.

***

துணைத் தகவல்

முதலீட்டு வகைகள்

முதலீட்டாளர் ஒவ்வொருவரும் தமது பண வலிமை, மன வலிமை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பிரித்து முதலீடு செய்ய வேண்டும். அதற்கு, எத்தனை வகையான முதலீடுகள் இருக்கின்றன, அவற்றின் தன்மை என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக முதலீடுகளை வங்கி வைப்புகள், பத்திரங்கள், பங்குகள், பரஸ்பர நிதி அலகுகள், தங்கம், நிலம் மற்றும் மாற்று வழிமுறைகள் எனப் பிரிக்கலாம்.

வங்கி வைப்புகள்

சேமிப்பை முதலீடாக மாற்றுவதில் முதலாவதும் முக்கியமானதுமான கருவி இதுதான். வங்கிகளில் நமது கைவசமுள்ள பணத்தைப் போட்டுவைப்பது சேமிப்புக் கணக்கு (சேவிங்க்ஸ் அக்கவுன்ட்). இவ்வாறாக அன்றி, மாதந்தோறும் குறிப்பிட்ட பணத்தைச் சேமிப்பது தொடர் வைப்பு (ரெக்கரிங் டெபாசிட்). அதனையே மொத்தமாக ஒரு தொகையை ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களுக்கு வங்கிகளில் வைத்திருப்பது நிரந்தர வைப்பு அல்லது குறித்த கால வைப்பு (ஃபிக்ஸட் டெபாசிட்). சில வங்கிகள் சேமிப்புக் கணக்கோடு இணைந்த நிரந்தர வைப்பு வசதியைத் தருகின்றன. குறிப்பிட்ட அளவுக்கு மேல் சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தை நிரந்தர வைப்பாக மாற்றிக்கொள்ளலாம்; தேவைப்பட்டால், சேமிப்புக் கணக்கில் மாற்றி பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

சேமிப்புக் கணக்குக்கு பொதுவாக ஆண்டுக்கு சுமார் 4 சதவீத வட்டித் தொகை 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. தொடர் வைப்புக்கும் குறிப்பிட சதவீத வட்டி உண்டு. நிரந்தர வைப்பு அல்லது குறித்த கால வைப்புக்கு ஆண்டு வட்டி மாதந்தோறும் பிரித்து வழங்கப்படுவதும் உண்டு. அதுபோக, வட்டியை 3 மாதங்களுக்கு ஒருமுறை அசலுடன் சேர்த்து கூட்டு வட்டியாகத் தருகின்ற வசதியும் உண்டு. வங்கிகளில் மட்டுமின்றி அஞ்சலகங்களிலும் இதுபோன்ற சேமிப்பு, தொடர் வைப்பு, நிரந்தர வைப்பு முதலீடுகளைத் தொடங்கலாம். பொதுத் துறை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் இடப்படுகின்ற இதுபோன்ற முதலீடுகள், அதிக வட்டி தராவிட்டாலும் மிகவும் பாதுகாப்பானவை. சில வகை நிரந்தர வைப்புகளுக்கு வருமான வரிச் சலுகையும் உண்டு.

சில தனியார் நிதி நிறுவனங்களும் தொடர் வைப்பு, நிரந்தர வைப்பு ஆகியவற்றை ஏற்கின்றன. இவற்றில் முதலீடு செய்யும்போது அதிக வட்டியை மட்டும் கணக்கில் கொள்ளாமல், அந் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தரக் குறியீடு (கிரெடிட் ரேட்டிங்) அதிகபட்சமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து முதலீடு செய்ய வேண்டும். டிரிபிள் ஏ, டபிள் ஏ, ஏ பிளஸ் போன்றவை சிறப்பான தரக் குறியீடுகள் ஆகும்.

பத்திரங்கள்

இவை, அரசும் பொதுத் துறை நிறுவனங்களும் வழங்குகின்ற உத்தரவாதப் பத்திரங்கள் (பாண்ட்ஸ்), நிறுவனங்கள் வெளியிடுகின்ற கடன் பத்திரங்கள் (டெபஞ்சர்ஸ்) என இரு வகைப்படும். இரண்டுமே ஏறத்தாழ வங்கிகளில் இடப்படும் நிரந்தர வைப்பு முதலீடுகளைப் போன்றதுதான். இதில் முதல் வகையான உத்தரவாதப் பத்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை. அதேநேரத்தில், தனியார் நிறுவனக் கடன் பத்திரங்கள் இதுபோன்ற நிறுவனங்களின் சாதாரண நிரந்தர வைப்பு நிதித் திட்டங்களையும் பங்கு முதலீடுகளையும்விட பாதுகாப்பானவை. நிரந்தர வைப்பு முதலீடுகளைவிட இதுபோன்ற பத்திரங்கள், கடன்பத்திரங்களிலான முதலீடுகளுக்கு வட்டித் தொகை சற்று கூடுதலாக இருப்பதுண்டு. அரசு உத்தரவாதப் பத்திரங்களுக்குப் பெரும்பாலும் ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. கடன் பத்திரங்களைப் பொருத்தவரை ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை இல்லையேல் 6 மாதங்களுக்கு ஒருமுறை என்றோ வட்டி வழங்கப்படுகிறது. மேலும், ஆண்டு வட்டியை அசலுடன் சேர்த்து கூட்டு வட்டியாகப் பெறுகின்ற வசதியையும் சில கடன் பத்திரங்கள் வழங்குகின்றன. சில வகை அரசு மற்றும் தனியார் நிறுவனப் பத்திரங்களுக்கு வருமான வரிச் சலுகையும் உண்டு.

பங்குகள்

தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் வெளியிடுகின்ற ஷேர்கள் எனப்படும் பங்குகளும் முதலீடுகளுக்கான சிறந்த வாய்ப்பாகும். பத்திரங்களில் கிடைக்கக்கூடிய வட்டி ஒரு நிரந்தரமான ஆதாயம். ஆனால், பத்திரங்களில் கிடைக்கக்கூடிய ஆதாயமானது ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது. இதில் இடர்களும் உண்டு, கூடுதல் ஆதாயங்களும் உண்டு. நிறுவனங்கள் அவற்றின் பங்குகளை வெளியிடும்போது நேரடியாகவும் வாங்கலாம், இல்லையேல், ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள இதுபோன்ற பங்குகளை பங்குச் சந்தைகளிலும் வாங்கலாம். இவ்வாறாக நேரடியாகவோ அல்லது இரண்டாம்நிலைச் சந்தை எனப்படும் பங்குச் சந்தையிலோ வாங்கப்படும் பங்குகளை குறிப்பிட்ட காலத்துக்கு நம் வசம் நிரந்தர முதலீடுபோல் வைத்துக்கொண்டு, அதற்கு ஆண்டுக்கு ஒருமுறை கிடைக்கின்ற டிவிடெண்ட் எனப்படும் லாப ஈவுத்தொகையை ஆதாயமாகப் பெறலாம். இல்லையேல், பங்குச் சந்தையில் இந்தப் பங்குகளின் விலை உயரும்போது விற்று லாபமும் ஈட்டலாம். ஒருவேளை விலை குறைந்தால் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.

நாம் வாங்கி வைத்துள்ள பங்குகளுக்குரிய நிறுவனங்களின் செயல்பாட்டின் மூலம் கிடைக்கும் லாப நஷ்டத்தைப் பொருத்து, அதற்குக் கிடைக்கும் ஈவுத்தொகை மாறுபடும், சில சமயம் ஈவுத்தொகை கிடைக்காமலும் போகலாம். இதேபோல், பங்குகளை இரண்டாம்நிலைச் சந்தையில் வாங்கி விற்கும்போதும் நிறுவனச் செயல்பாடு, நிறுவனம் சார்ந்த துறையின் செயல்பாடு, தேசிய மற்றும் சர்வதேசப் பொருளாதர நிலைமை உள்ளிட்ட காரணங்களால் பங்குகளின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைப் பொருத்து நாம் லாபமும் அடையலாம், நஷ்டத்தையும் எதிர்கொள்ளலாம். இடர்களைத் தாண்டி கிடைக்கக்கூடிய ஆதாயத்தைக் கருதுவோர், அதற்கேற்ப பண – மன வலிமை உடையவர்கள் இவ் வகை முதலீட்டில் இறங்கலாம்.

பரஸ்பர நிதி

கடன்பத்திரங்களைப்போல பாதுகாப்பும் வேண்டும், பங்குகளைப்போல ஆதாயமும் வேண்டும் என்று விரும்புவோருக்கு இவ்வகை முதலீடு ஒரு வரபிரசாதம். யூடிஐ என்ற பொதுத் துறை நிறுவனமும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் பரஸ்பர நிதித் திட்டங்களை அறிமுகப்படுத்தி, அவற்றின் அலகுகளை (யூனிட்) விற்பனை செய்கின்றன. இவற்றையும் பங்குகளைப்போல நேரடியாகவும் வாங்கலாம், இரண்டாம்நிலைச் சந்தையிலும் வாங்கலாம். இவ்வகை முதலீடுகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள், துறைவாரி முதலீட்டு நிபுணர்களைக் கொண்டு அரசுப் பத்திரங்கள், தனியார் கடன்பத்திரங்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து, அவற்றில் கிடைக்கும் லாபத்தை யூனிட்தாரர்களுக்குப் பகிர்ந்து அளிக்கின்றன. இந்த பரஸ்பர நிதித் திட்டங்களிலும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான திட்டங்கள், ஆதாயத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையிலான திட்டங்கள், இரண்டையுமே சமச்சீராய் நோக்கும் (பேலன்ஸ்டு ஃபண்ட்) திட்டங்கள் என இருக்கின்றன.

தங்கம்

ஆதிகாலம் தொட்டு இருக்கின்ற மனித குல முதலீடு தங்கம். ஆசைக்காக அணிந்துகொள்வதற்காக மட்டுமின்றி, அவசரத் தேவைக்கு உதவுபவையாகவும் தங்கத்தின் மீதான முதலீடுகள் அமைகின்றன. முதலீட்டை மட்டுமே கருதுவோர், நகைகளாக வாங்கமால் தங்க நாணயங்கள் அல்லது கட்டிகளாக வாங்கலாம். நேரடியாகத் தங்கத்தை வாங்காமல் தங்கம் தொடர்பான பத்திரங்களிலும் (கோல்டு பாண்ட்) முதலீடு செய்யலாம். தங்கம் பொதுவாக விலையேற்றம் பெறுவதால் ஆதாயம் அதிகம். கையிருப்பாக வைத்திருக்கும் தங்கத்துக்கு திருடுபோகுதல் உள்ளிட்ட அபாயங்கள் இருந்தாலும், காகிதத் தங்கம் எனப்படும் தங்கப் பத்திரங்களுக்கு அந்த அபாயம் இல்லை.

நிலம்

தங்கத்தைப்போலவே இதுவும் மனிதனின் ஆதிகாலந்தொட்டு இருக்கின்ற முதலீடுகளில் ஒன்று. வீட்டு மனைகளாகவோ, வீடுகளாகவோ வாங்குவது இந்த ரகத்தைச் சேர்ந்தது. முதலீட்டு நோக்கில் வாங்கி, விற்க நினைப்போர் வீட்டு மனைகளையே அதிகம் வாங்குவர். நில ஆக்கிரமிப்பு, விலை ஏற்ற இறக்கம், விற்பனையில் ஏற்படக்கூடிய சுணக்கம் ஆகிய இடர்களுக்கு இது உட்பட்டது.

மாற்று முதலீடுகள்

அந்நியச் செலாவணிகளை வாங்கி விற்றல், பங்குச் சந்தையைப்போல பெட்ரோலியம், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் மீதான வர்த்தகம் நடைபெறும் பண்டகச் சந்தை முதலீடு, பங்குச் சந்தையிலேயே சாதாரண வகை முதலீடுகளைப் போலன்றி ஊகம் சார்ந்த ஆப்ஷன்ஸ் மற்றும் ஃபியூச்சர்ஸ் போன்ற முதலீடுகள் ஆகியவை மாற்று முதலீடுகள் ஆகும். ஆனால் இவையெல்லாம் இடர்கள் அதிகம் உள்ளவை. ஆதாயம் அதிகம் வருவதைப்போல இழப்பையும் அதிக அளவில் தரக்கூடியவை. நிதி வளமும், போதிய பயிற்சியும் இல்லாதவர்கள் இதில் இறங்கினால், அது முதலீடாக அல்லாமல் சூதாட்டம்போல் ஆகிவிட வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com