12. பொன்னான முதலீடு

அன்னியச் செலாவணிகளுக்கு ஈடாக தங்கத்தை அதிக அளவில் கையிருப்பில் வைத்திருக்கும் முதல் 10 நாடுகளில் 10-வது இடத்தில் நமது நாடு உள்ளது. இந்தியாவின் கைவசமுள்ள தங்கத்தின் இருப்பு 557.70 டன்.

செல்வம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது மஞ்சள் உலோகமான பொன்தான், காகிதப் பணம் அல்ல. ஏனெனில், ஆதிகாலத்தில் பண்டமாற்று முறைக்குப் பதிலாக, பொதுவான செலாவணியாக முதலில் பயன்பட்டது தங்கம்தான். பிற உலோகங்களிலான பணமும், காகிதப் பணமும் பிற்காலத்தில் வந்தவையே. வெள்ளி முதலிய மற்ற உலோகங்களைவிட விலை மதிப்பு மிக்கதும், பிளாட்டினம் போன்ற விலை உயர்வான உலோகம் இருந்தாலும், அதனைவிட மக்களால் மிகவும் மதிக்கப்படுவதும் பொன்னே.

சாதாரண மக்கள் மட்டுமல்ல, அரசாங்கங்களேகூட தங்கத்தைத்தான் தங்களது பொருளாதார வளத்துக்கான பொருளாகக் கருதி சேர்த்து வைக்கின்றன. ஒரு நாட்டின் செல்வ வளம் அல்லது பொருளாதார வளம் என்பது அந்த நாட்டின் கையிருப்பில் உள்ள அந்நாட்டுச் செலாவணியை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, அதன் வசமிருக்கும் அன்னிய நாட்டுச் செலாவணிகள் மற்றும் தங்க இருப்புகளைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. பொருள் உற்பத்தியும், ஏற்றுமதியும் மிகுதியாக உள்ள நாட்டில் அன்னியச் செலாவணிகளும் அபரிமிதமாகத்தான் இருக்கும். அதேபோல, என்றும் மதிப்புடைய தங்கத்தையும் அன்னியச் செலாவணிகளுக்கு ஈடாக பல நாடுகள் சேமித்து வைத்துள்ளன. இவ்வாறாக தங்கத்தை அதிக அளவில் சேர்த்து வைத்துள்ள நாடுகளில் முதலிடம் வகிப்பது, உலகிலேயே பொருளாதார வளமிக்க நாடாகத் திகழும் அமெரிக்கா. அந்நாட்டு அரசிடம் அண்மைக்கால புள்ளிவிவரப்படி, 8,132 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. (ஒரு டன் என்பது 1,000 கிலோ.) அமெரிக்காவின் மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பில் இது 73 சதவீதம்.

அன்னியச் செலாவணிகளுக்கு ஈடாக தங்கத்தை அதிக அளவில் கையிருப்பில் வைத்திருக்கும் முதல் 10 நாடுகளில் 10-வது இடத்தில் நமது நாடு உள்ளது. இந்தியாவின் கைவசமுள்ள தங்கத்தின் இருப்பு 557.70 டன். இது, நாட்டின் மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பில் 7 சதவீதம். 8-வது இடத்தில் உள்ள, சின்னஞ்சிறிய ஆனால் பொருளாதார வலிமையில் பெரிய நாடான ஜப்பானிடம் 765.20 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. இருப்பினும் இது, அதன் மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பில் 2 சதவீதம் மட்டுமே. அதாவது, அந்நாட்டிடம் தங்க கையிருப்பும் அதிகம், அதைவிட அபரிமிதமாக அன்னியச் செலாவணிகளும் கையிருப்பில் உள்ளன. இதேபோல் மக்கள்தொகையில் உலகின் மிகப்பெரிய நாடான சீனா, 1,054.10 டன் தங்க கையிருப்புடன் இந்தப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் அந்நாட்டின் மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பில் இது ஒரு சதவீதம் மட்டுமே.

இவ்வாறாக, தங்கத்தை விலை உயர்ந்த பொருளாகக் கருதி அனைத்து நாட்டு அரசுகளும் தங்கள் கையிருப்பில் சேமித்து வைத்துள்ளன. அவ்வாறெனில், சாதாரண மக்களுக்கும் தங்கம் மதிப்பு மிக்கதுதானே? வெறும் விலை மதிப்புக்காக மாத்திரமின்றி, மக்களின் உணர்விலும் மிகுந்த மதிப்பைப் பெற்றுள்ள தங்கம், முதலீட்டுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.

நிலம், பங்குப் பத்திரம் போன்ற மற்ற முதலீடுகளைவிட தங்கம் எளிதில் வாங்கக்கூடியது, விற்கக்கூடியது. அவசரத் தேவைக்காகக் கடன் பெறவோ, அடமானம் வைத்துத் தொகை பெறவோ தங்கம் மிகவும் ஏற்றது. பொதுவாக மற்ற முதலீடுகளைவிட, விலையேற்றம் மிகுந்திருப்பதால், ஆதாயம் அதிகமாகத் தருவது பொன். நகைகள் போன்ற விருப்ப நுகர்வுக்காகவும், செல்வ வளத்தை வெளிக்காட்டுவதற்கும் பயன்படுவதும் தங்கம்தான். ஆகையால், அக்காலத்தில் இருந்தே தங்கத்தை ஏதேனும் ஒருவகையில் சேமித்து வைப்பது, செல்வ வளமாகக் கருதி பாதுகாப்பது அனைத்து நாடுகளிலும், குறிப்பாக இந்தியாவில் பாரம்பரிய வழக்கமாகவே அமைந்துள்ளது. (இந்தியாவைப் பொருத்தவரை அரசின் வசமுள்ள தங்கக் கையிருப்பைவிட, தனிநபர்களிடம் இருக்கும் ஒட்டுமொத்த தங்கக் கையிருப்பு உலகிலேயே மிக அதிகம்). இதன் காரணமாகவே, மணமக்களுக்கு குறிப்பாக மணமகளுக்கு திருமணத்தின்போது நகைகளை அணிவிப்பதும், சீர்வரிசையாகத் தருவதும் நமது பாரம்பரியத்தில் இடம்பெற்றுள்ளது. ஆக, தங்க முதலீடு என்பது தொன்றுதொட்டு வரும் வழக்கமே.

தங்கத்தின் மீதான முதலீடு நுகர்வுக்கும் ஏற்றது, அவசரத் தேவைக்காகவோ அல்லது எதிர்காலத் தேவைக்காகவோ பயன்படும் சேமிப்புக்கும் ஏற்றது. இதனை விளக்கும் வகையில் ‘அரண்’ என்ற தலைப்பிலான அதிகாரத்தின் கீழ் திருக்குறள் கூறுவதைக் காண்போம் -

ஆற்று பவர்க்கும் அரண்பொருள்; அஞ்சித்தற்

போற்று பவர்க்கும் பொருள். (741)

பகைவரால் கவரப்படாமல் இருப்பதற்காக நாட்டைச் சுற்றி, தலைநகரைச் சுற்றி அமைக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடே அரண். மதில் சுவர், அகழி, வலுவான கோட்டைகள் ஆகிய அனைத்துமே அரண் ஆகும். பொதுவாக, அரண் என்பது பாதுகாப்பு ஏற்பாடு. இவ்வாறான பாதுகாப்பு மிகுந்து இருக்கும் அரசரின் வாழ்விடம்தான் அரண்மனை எனப்படுகிறது. இதுபோன்ற அரண் என்பது, ஆற்றுபவர்க்கும் - அதாவது அரசாட்சி செய்வோருக்கும், வர்த்தகத்துக்காக ஒரு வழியே செல்வோருக்கும், போர் புரியச் செல்வோருக்கும் மிகவும் முக்கியமான பொருள் ஆகும். அதேபோல், அஞ்சித் தற்போற்றுபவர்க்கும், அதாவது அச்சத்தால் தன்னைத் தற்காத்துக்கொள்ளக் கருதுவோருக்கும் இந்த அரண் ஏற்ற பொருள் ஆகும் என்கிறது இக் குறள்.

தங்கமும் இந்த அரணைப் போன்றதே. தற்போதைய நுகர்வுத் தேவைக்காக வாங்குதல் என்ற ஆற்றுதலுக்கும் ஏற்றது பொன். அதேபோல், எதிர்காலத் தேவைகள் அல்லது அவசரத் தேவைகள் கருதி செய்யப்படும் முதலீடு எனப்படும் தற்போற்றுதலுக்கும் ஏற்றது பொன். இதே கருத்தை மற்றொரு குறளும் உணர்த்துகிறது –

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்

நல்லாள் உடையது அரண். (746)

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்து உதவும் நல் ஆள் உடையது அரண் என்று பிரித்துப் படிக்க வேண்டும். தன்னிடம் உள்ளவர் அனைவருக்கும் தேவைான பொருள்களைக் கொண்டிருப்பதோடு, தேவையான இடத்தில் பாதுகாப்புக்காக உதவுகின்ற நல்ல வீரர்களையும் கொண்டிருப்பதே அரண் ஆகும் என்று இதற்குப் பொருள். தங்கமும் இதுபோல்தான். தங்கம் வைத்திருப்பவர் எல்லாப் பொருளும் (செல்வமும்) உடையவராக ஆகிறார், மேலும் தேவைப்படும்போது அந்த இடத்திலேயே பிணையாக வைத்துப் பணம் வாங்குவதற்கும் தங்கம் நன்கு உதவுகிறது.

இதை உணர்ந்ததால்தானோ என்னவோ நமது இந்தியா, அக்காலத்தில் இருந்தே தங்க நுகர்வில் முதலிடம் பெற்றுத் திகழ்கிறது. வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்யும் மிகப்பெரிய நாடாகவும் திகழ்கிறது. ஏனெனில், இந்தியாவில் உற்பத்தியாகும் தங்கம் மிகச் சொற்பமே.

இந்தியா கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில் ரூ.1.80 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. 2014-ஆம் ஆண்டில் உலக அளவிலான தங்க உற்பத்தி 2,860 டன். இதில் 450 டன் உற்பத்தி செய்து சீனா முதலிடம் வகிக்கிறது. இதேபோல், அதே 2014-இல் 868 டன் தங்கத்தை நுகர்வு செய்து, தங்க நுகர்விலும் சீனா முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் 2014-ஆம் ஆண்டில் 1.56 டன் தங்கத்தை மட்டுமே உற்பத்தி செய்துள்ள இந்தியாவோ, அந்த ஆண்டில் 843 டன் தங்கத்தை நுகர்வு செய்து, உலக அளவில் இரண்டாமிடம் வகிக்கிறது. அதற்கு முந்தைய சில ஆண்டுகளில் இந்தியாவே தங்க நுகர்வில் முதலிடம் பெற்றுத் திகழ்ந்தது.

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மிகுதியான தங்க நுகர்வில் பெரும்பாலானவை ஆபரணத் தேவைகளுக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த நுகர்வான 843 டன் தங்கத்தில், 662 டன் தங்கம் ஆபரணத் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தற்காலத்தில் முதலீட்டு நோக்கத்துக்கான தங்க நுகர்வும் அதிகரித்து வருகிறது. முதலீட்டு நோக்கிலான தங்கம் பெரும்பாலும் தங்க நாணயம் அல்லது தங்கக் கட்டி வடிவில் வாங்கப்படுகிறது. அதேநேரத்தில் உலோகமாக உள்ள தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்யாமல், கோல்டு இ.டி.எஃப். எனப்படும் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் – அதாவது தங்கப் பரிவர்த்தனை விற்பனை நிதிப் பத்திரம். இ-கோல்டு எனப்படும் இணைய வழித் தங்கம், கோல்டு ஸ்டாக்ஸ் எனப்படும் தங்க நிறுவனப் பங்குகள் ஆகிய புதுமையான வழிமுறைகளில் தங்கத்தில் மறைமுகமாகவும் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.

தங்கத்தில் முதலீடு எனும்போது நகைகளாக அன்றி தங்க நாணயம், தங்கக் கட்டி (கோல்டு பார்) ஆகிய வடிவிலோ அல்லது இ.டி.எஃப்., இ-கோல்டு, கோல்டு ஸ்டாக் போன்ற உலோகமில்லா தங்கத்திலோ முதலீடு செய்வதுதான் சாலச் சிறந்தது. நமது தேவைகளுக்காக ஓரளவு தங்க நகைகளை வாங்கலாம் தவறில்லை. ஆனால், முதலீட்டு நோக்கில் நகைகள் ஏற்புடையதல்ல. ஏனெனில், விலை உயரும்போது அவற்றை விற்று லாபமீட்டலாம் என்று கருதினாலும், நகைகளுக்கான சேதாரம், செய்கூலி, வாங்கும்போது சற்று குறைவான விலைக்கே தங்க நகை வியாபாரி வாங்குவார் ஆகிய காரணங்களால், நமக்கு லாபம் குறையலாம் அல்லது நஷ்டம்கூட ஏற்படலாம். அதற்குப் பதில், நாணயமாகவோ அல்லது கட்டிகளாகவோ இருந்தால் சேதாரம், செய்கூலி, விலைக் குறைவு இன்றி அன்றைய விலை நிலவரப்படியே தங்கம் நம்மிடமிருந்து வாங்கப்படும்.

அதேநேரத்தில் உலோக வடிவில் இருக்கும் தங்கம், அது நகைகளாகவோ அன்றி நாணயமாகவோ அல்லது கட்டியாகவோ இருந்தாலும்கூட திருட்டுப் பயம் உண்டு. அதற்குப் பதிலாக, உலோகமற்ற இ.டி.எஃப்., இ-கோல்டு, கோல்டு ஸ்டாக் ஆகியவை ஏற்றவை. ஏனெனில், இதற்கு கள்வர் பயம் கிடையாது. தேவைப்பட்டால், பங்குச் சந்தைகளில் இவற்றை விற்று அதற்கு உரிய பணத்தைப் பெற்று, விருப்பமான வகையில் தங்கத்தை நேரடியாகவே வாங்கிக்கொள்ளலாம். அதிலும் இ-கோல்டு வழிமுறையில், பணத்துக்குப் பதிலாக தங்க நாணயமாகப் பெறுகின்ற வழிமுறையும் உண்டு.

இதேபோல், பண்டகச் சந்தை எனப்படும் கமாடிடீஸ் மார்க்கெட்டிலும் தங்கத்தின் மீது முதலீடு செய்து, தேவைப்படும்போது அதனை விற்று லாபமீட்டலாம், அல்லது தேவைக்கான தங்கமாகவே பெறலாம். பரஸ்பர நிதித் திட்டங்களிலும் தங்க நிறுவனப் பங்குகள் மீது மட்டுமே முதலீடு செய்ய வாய்ப்பளிக்கும் கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கின்றன. அந்தவகையிலும் மறைமுகத் தங்க முதலீட்டை மேற்கொள்ளலாம். எஸ்.ஐ.பி. வழிமுறையில் மாதந்தோறும் குறிப்பிட்ட கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்யலாம், அல்லது மாதந்தோறும் நம்மால் இயன்ற அளவு தங்க நாணயங்களாகவோ அல்லது கோல்டு இ.டி.எஃப். அல்லது இ-கோல்டாகவோ தொடர்ந்து வாங்கலாம். இவ்வாறு, தங்கத்தில் சிறுகச் சிறுக இடப்படுகின்ற தொடர் முதலீடு, நமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக விளங்கும்.

சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை

ஊக்கம் அழிப்பது அரண். (744)

என்கிறார் திருவள்ளுவர். காக்கப்படுகின்ற இடம் சிறியதாக, அதனால் பாதுகாக்கப்படுகின்ற இடம் பெரிய அளவுடையதாக, நம்மை எதிர்த்து போரிட வந்த பகைவரின் ஊக்கத்தை அழிக்கக்கூடிய திறன் படைத்ததாக இருப்பதே அரண் என்று இக் குறளுக்குப் பொருள். எல்லையிலே நமது வீரர்கள் பாதுகாப்புக்காக விழிப்புணர்வுடன் செயலாற்றுகின்ற பரப்பளவு சிறியதாக இருக்கிறது, ஆனால், அந்தச் சிறிய இடத்திலே நமது வீரர்களால் மேற்கொள்ளப்படுகின்ற பாதுகாப்பு அரண் ஆனது, நாடு முழுமைக்குமாகிய மிகப் பரந்த நிலப்பரப்பை பாதுகாப்பதோடு, நம்மை எதிர்த்துப் போரிடவோ, ஊடுருவவோ முயலுகின்ற எதிரிகளின் ஊக்கத்தை அழிப்பதாகவும் அமைந்துள்ளது. அதேபோல்தான், தங்கத்தில் சிறிய அளவில் தொடர்ந்து இடப்படுகின்ற முதலீடு, பெரிய அளவில் வளர்ச்சியடைந்து, வளமின்மை (வறுமை) என்ற நமது பகையை அழிக்கின்ற திறன் வாய்ந்த அரணாக அமைகிறது.

எந்த வகையிலும் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது நமது செல்வ வளத்தை அதிகரிக்கவே செய்கிறது. நகைகளாக வாங்கி அணியும்போது நமது செல்வ வளத்தைக் காட்ட உதவுகிறது. மாறாக, உலோகமற்ற தங்கத்தில் இடப்படுகின்ற முதலீடோ, நமக்குத் தேவைப்படும்போது தங்கமாக மாறி உதவுவதுடன், வெளிப்படையாகத் தெரியாவிடினும் நம் செல்வ வளத்தை அதிகரிக்கச் செய்து நமது பண பலத்தோடு மன பலத்தையும் அதிகரிக்க உதவுகிறது.

மனிதரைக் கீழ்மைப்படுத்துகின்ற விஷயங்களில் முதன்மையானது செல்வமின்மையே. அதேநேரத்தில், பகைவருக்கு அச்சம் தருவதில் தலையாயதும் செல்வ வளமே. இதனை ‘பொருள் செயல்வகை’ என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் தெளிவாக எடுத்தியம்பியுள்ளார் -

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரியது இல். (759)

செய்க பொருளை, செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு அதனின் கூரியது இல் என்று பிரித்துப் படிக்க வேண்டும். பொருள் செல்வத்தை ஈட்ட வேண்டும், நம்முடைய எதிரிகளின் ஆணவத்தை அறுப்பதற்கு அதனைவிடக் கூர்மையான எஃகு வாள் வேறு எதுவும் இல்லை என்று இதற்குப் பொருள்.

இவ்வாறாக, நம்மை ஏளனம் செய்யும் எதிரிகளின் ஆணவத்தை அடக்கும் வகையில் நாம் பொருள் செல்வத்தை ஈட்டுவதற்கு, மஞ்சள் உலோகப் பொருளான தங்கத்தின் மீது நாம் இடுகின்ற முதலீடு மிகச் சிறந்த ஆயுதமும், அரணும் ஆகும்.

***

துணைத் தகவல்

தங்க முதலீட்டு வகைகள்

தங்கத்தின் மீதான முதலீட்டை பொதுவாக 7 வகைகளாகப் பிரிக்கலாம். அவை குறித்து கீழே காண்போம் –

1. நேரடித் தங்கம்

தங்க நகைகள் (ஆபரணங்கள்), தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள் என உலோகத் தங்கத்தை நேரடியாக வாங்குவது இவ் வகையைச் சார்ந்தது. இதில் நகைகளாக வாங்குவது முதலீட்டு நோக்கில் உகந்தது அல்ல. அதற்குப் பதில் கட்டிகளாகவோ, நாணயங்களாகவோ வாங்கலாம். நுகர்வுத் தேவை இருப்பின் இந்தக் கட்டிகளை அல்லது நாணயங்களைக் கொடுத்து நகைகளாக மாற்றிக்கொள்ளலாம். தங்க நகைகளைப்போல் தங்கக் கட்டி, நாணயங்கள் ஆகியவற்றுக்கு சேதாரம், செய்கூலி, வாங்கும் நேரத்தில் விலைக் குறைப்பு போன்ற இடர்பாடுகள் இல்லை. இருப்பினும் அனைத்து வகை உலோகத் தங்கத்துக்கும் திருடுபோக நேரிடலாம் என்ற அபாயம் உண்டு. தங்க நகை விற்பனையகங்களில் தங்க நகைகள், தங்கக் கட்டி, தங்க நாணயங்களை வாங்கலாம், அவற்றிடம் திரும்ப விற்கலாம். பொதுத் துறை வங்கிகளிடமிருந்தும் தங்க நாணயங்கள் அல்லது தங்கக் கட்டிகளை வாங்கலாம். ஆனால் அவற்றிடம் திரும்ப விற்க முடியாது. சொந்தத் தேவைக்குப் பயன்படுத்தலாம், இல்லையேல் நகை வியாபாரிகளிடம்தான் விற்க முடியும்.

2. இ-கோல்டு

தமிழில் இதனை இணையவழித் தங்கம் எனலாம். பங்குச் சந்தைகளில் எவ்விதம் பல்வேறு நிறுவனப் பங்குகளை வாங்குகின்றோமோ அதேபோல், தங்கத்தையும் பங்குச் சந்தையில் இருந்து டி-மேட் வடிவில் அதாவது எலெக்ட்ரானிக் (மின்னணு) வடிவில் வாங்கலாம். தங்க நகைகளைப்போல இதற்கு சேதாரம், செய்கூலி இல்லை என்பதால் விலை குறைவானது. தேவைப்படும்போது இணையவழியிலேயே இத் தங்கத்தை விற்று பணமாகப் பெறலாம், அல்லது அப்போதைய மதிப்புக்குரிய தங்கமாகவே பெறலாம். நாம் குறிப்பிட்ட பணத்தை இதில் முதலீடு செய்யும்போது அதற்குரிய கிராம் தங்கமாகத்தான் இது முதலீடு செய்யப்படும். ஆகையால், திரும்ப எடுக்கும்போது விலை ஏறினாலும் குறைந்தாலும் ஏற்கெனவே வாங்கப்பட்ட கிராமின் அளவு மாறாது. திருட்டு பயம், லாக்கரில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய செலவு ஆகியவற்றுக்கு வழியில்லை.

3. கோல்டு இ.டி.எஃப்.

தங்கத்தை வாங்கி விற்கும் நிதி அமைப்புகள் வெளியிடும் பத்திரங்களே கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் (கோல்டு இ.டி.எஃப்.) எனப்படும் தங்கப் பரிவர்த்தனை விற்பனை நிதிப் பத்திரங்கள். இதனையும் இ-கோல்டு போல பங்குச் சந்தைகளில் வாங்கலாம், விற்கலாம். ஆனால் இத்தகு இ.டி.எஃப். பத்திரங்களை விற்கும்போது அதற்குரிய பண மதிப்பை மட்டுமே பெற இயலும், தங்கமாக வாங்க இயலாது. திருட்டு பயம், லாக்கரில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய செலவுகள் இல்லாதது.

4. கோல்டு ஸ்டாக்ஸ்

தங்கத்துக்கு எப்போதும் தேவை அதிகரித்துச் செல்வதால், பெரும்பாலும் விலையும் உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஆகையால், தங்கத்தைச் சுரங்கங்களில் இருந்து வெட்டியெடுத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், தங்க நகைகளைத் தயாரித்து விற்கும் நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகளும் பெரும்பாலும் விலை ஏற்றம் கண்டு வருகின்றன. இவற்றைக் கருத்தில் கொண்டு தங்கம் சார்ந்த நிறுவனப் பங்குகளில் இடப்படுகின்ற முதலீடு இந்த வகையைச் சார்ந்தது. தங்கம் பொதுவாக விலையேறிச் சென்றாலும் சிலசமயங்களில் விலை குறையவும் வாய்ப்புண்டு. மேலும் தங்கச் சுரங்க நிறுவனங்களுக்கு, சுரங்கங்கள் இடிந்துபோவதால் பேரிழப்பு, தங்கத் தாது வறண்டுபோதல், அரசின் புதிய வரி விதிப்பு அல்லது கொள்கைத் திட்டங்களால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. இதேபோல் தங்க நகைகள் விற்பனை செய்யும் நிறுவனங்களும் புதிய வரி விதிப்பு, அரசின் புதிய அறிவிப்புகள், பொருளாதார மந்த நிலையால் விற்பனைச் சுணக்கம் போன்றவற்றால் எதிர்பாராத இழப்பைச் சந்திக்க நேரிடும். ஆகையால், இவ் வகை முதலீட்டில் ஆதாயம் இருப்பதைப்போல அபாயமும் இருக்கவே செய்கிறது.

5. கோல்டு மியூச்சுவல் ஃபண்ட்

பரஸ்பர நிதியமைப்புகளின் சில திட்டங்கள், தங்கத்தின் மீதும் தங்க நிறுவனப் பங்குகளின் மீதும் முதலீடு செய்யும் வகையில் அமைந்துள்ளன. தங்க நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதைவிட இதுபோன்ற தங்க பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்வது இடர்கள் குறைவானது. பல்வேறு தங்க நிறுவனங்கள் மற்றும் நேரடித் தங்கத்தின் மீது முதலீடு செய்து வர்த்தகம் செய்யப்படுவதால், ஒரு வகையில் நஷ்டம் ஏற்பட்டாலும், மறு வகையில் லாபம் ஈட்டப்பட்டு இடர்கள் குறையும் என்பதால் தங்க பரஸ்பர நிதி யூனிட்டுகள், இதுபோன்ற பங்குகளைவிடச் சிறந்தவை.

6. பண்டகச் சந்தையில் தங்கம்

பங்குச் சந்தையில் பங்குகளை விற்பனை செய்வதுபோல், பண்டகச் சந்தையில் தங்கம், பெட்ரோல் போன்ற பல பொருள்களை விற்பனை செய்கிறார்கள். இதில் நேரடியாகப் பொருள்களை வாங்கி, விற்பதும் உண்டும். இல்லையேல் ஊக வணிகத்தில் இறங்கி, பண்டகத்தை நேரடியாக விற்கவோ வாங்கவோ செய்யாமல் விலை ஏற்ற – இறக்கத்துக்கான விலை வித்தியாசத் தொகையை மாத்திரம் கொடுக்கவோ, செலுத்தவோ செய்வார்கள். இந்தப் பண்டகச் சந்தையில் தங்கம் வாங்குவது பங்குச் சந்தையில் வாங்குவதைவிட கூடுதல் நுணுக்கமும், இடர்களும் நிறைந்தது.

7. தங்கச் சேமிப்புப் பத்திரங்கள்

இந்தியாவின் தங்க நுகர்வு பெரிதும் இறக்குமதியையே சார்ந்துள்ளது. இவ்வாறு அதிக அளவில் முதலீடு செய்வதால் இந்தியாவின் கைவசமுள்ள அன்னியச் செலாவணியை அதிக அளவில் வெளிநாடுகளுக்குத் தரவேண்டி உள்ளது. இது பொருளாதார நிலையை ஓரளவு பாதிக்கும். இதனைக் கருத்தில்கொண்டும். நகைகள் சாராத முதலீட்டுத் தேவைக்காக தங்கத்தை வாங்குவோரின் நலன் கருதியும் தங்கச் சேமிப்புப் பத்திரங்களை மத்திய அரசே வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்தப் பத்திரங்களில் இடப்படும் பணமதிப்பிலான முதலீடு, அன்றைய தின விலை நிலவரப்படி தங்க கிராம்களாக இருப்பு வைக்கப்படுகிறது.

சவரன் கோல்டு பாண்ட் என்ற பெயரிலான இந்த தங்கச் சேமிப்புப் பத்திரங்களை மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தியது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இவ் வகைப் பத்திரங்கள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. அண்மையில் கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி தொடங்கிய இதன் வெளியீடு, மார்ச் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இத்திட்டத்தின்கீழ் ஒருவர் அன்றைய விலை நிலவரப்படி தங்கத்துக்கான தொகையைச் செலுத்தி அதற்குரிய கிராம் அளவிலான தங்கச் சேமிப்புப் பத்திரத்தை வாங்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 500 கிராம் வரை முதலீடு செய்யலாம். ஒரு கிராம், 2 கிராம், 5 கிராம், 10 கிராம், 50 கிராம் மற்றும் 100 கிராம் ஆகிய முகமதிப்பில் இப் பத்திரங்கள் கிடைக்கும். பொதுத் துறை வங்கிகளிலும், குறிப்பிட்ட அஞ்சலகங்களிலும் இப் பத்திரங்கள், வெளியீட்டுக் காலத்தின்போது விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த முதலீடுகள் 8 ஆண்டுகளுக்கானவை. தொடக்கத்தில் எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டதோ – அதாவது எவ்வளவு கிராம் தங்கத்துக்கான தொகை செலுத்தப்பட்டதோ – அதற்கு ஆண்டுக்கு 2.75 சதவீத வட்டி கணக்கிட்டு வழங்கப்படும். 8 ஆண்டுகள் கழித்து நமது முதலீட்டை பணமாகவோ அல்லது தங்கமாகவோ திரும்பப் பெறலாம். திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டால், முதிர்வுக்கு முன்னரே முதலீட்டைத் திரும்பப் பெறும் வசதி உண்டு. அத்துடன், பங்குச் சந்தையில் பங்குகளைப்போல, இந்த தங்கச் சேமிப்புப் பத்திரங்களையும் விற்பனை செய்யலாம். பங்குச் சந்தையில் இருந்தும் அன்றைய விலை நிலவரப்படி வாங்கலாம். அவ்வாறு வாங்கும்பட்சத்தில் நாம் திரும்ப பங்குச் சந்தையில் விற்காமல் முதலீட்டை முதிர்வின்போது திரும்பப் பெற விரும்பினால், அப் பத்திரத்தின் உரிமையை உரிய முறைப்படி நமது பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com