'பஸ்சில் உன் பக்கத்தில் உட்கார்ந்து வந்தவருக்கு செல்போனில் சார்ஜ் இல்லைன்னு எதைவச்சு சொல்றே?'
'என்கூட தொண தொணன்னு பேசிக்கிட்டே வந்தாரே!'
-எம்.பி.தினேஷ், கோவை - 25.
****
'அவர் கைதட்டி அழைத்தால் ஏன் திரும்பிப் பார்க்காமப் போறே?'
'கொடுத்த கடனைக் கேட்டுத் தொலைப்பான்!'
- பர்வதவர்த்தினி, பம்மல்.
****
'மணமக்களை வாழ்த்தியவர் கேட்ரிங்காரர்னு எப்படிச் சொல்றே?'
'அடையும் அவியலும் போல வாழ்கன்னு வாழ்த்தினாரே!'
- ஏ. நாகராஜன், பம்மல்.
****
'கீரை விற்பவருடன் என்ன பிரச்னை?'
'அரைக்கீரை பத்து ரூபாய்னு சொன்னாரு... அப்ப முழு கீரை எவ்வளவுன்னு கேட்டேன்... கோபப்படுறாரு!'
-அ. தெய்வசிகாமணி, காஞ்சிபுரம்.
****
'தேர்தல்ல சீட் கேட்கறீங்களே... எவ்வளவு செலவு பண்ணுவீங்க?'
'நீங்க எவ்வளவு கொடுத்தாலும் செலவு பண்ணுவேன், தலைவரே!'
-தீபிகா சாரதி, சென்னை 5
****
'அரசர் நடுநடுங்கிக் கொண்டே போறாரே, போருக்கா?'
'இல்லை... அரசி கூப்பிட்டார் என்று அந்தப்புரத்துக்கு!'
-மஞ்சுதேவன், பெங்களூரு.
****
'ஏங்க, நமக்குத்தான் மேரேஜ் ஆயிடுச்சே... இன்னும் ஏன் படகு மறைவுலேயே உக்காரணும்?'
'கடன் பாக்கிக்காக என்னைத் தேடுற சுண்டல்
காரன் கண்ல படாம இருக்கத்தான்!'
-எம்.ஏ.ஆதம், அரக்கோணம்.
****
'நாம ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணலாமா?'
'எங்க அம்மா என்னை நம்பி நிறைய இடத்துல மொய் செஞ்சு வச்சிருக்காங்க... அதான் யோசனையா இருக்கு!'
****
'பிளாட் விற்பனையில் நீள, அகலம் குறிப்பிட்டது சரி... அது எதுக்கு உயரம் எனக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்?'
'மழை பெய்தால் தண்ணீர் எவ்வளவு உயரம் வரை தேங்கி நிற்கும் என்பதைக் காட்டுவதற்காக!'
****
'குழந்தையும் வருமான வரித்துறையும் ஒன்றுதான்!'
'எப்படிச் சொல்றீங்க?'
'இரண்டு பேரும் நம்மிடம் முதலில் மொபைலைத்தான் கேட்பாங்க!'
****
'எதிர்த்த வீட்டுக்காரி, 'உங்களுக்குச் சபலப் புத்தி'ன்னு சொன்னா..!'
'பார்த்தியா... நீ எனக்குப் புத்தியே இல்லைன்னு சொன்னீயே?'
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
'என்ன சொல்லி கடன் கேட்டே... அவர் இல்லைன்னு சொன்னாரு?'
'நான் வெளியே கொடுத்திருக்கிற கடன் திரும்பி வந்ததும்... உங்க கடனை அடைச்சிடறேன்னு சொன்னேன்!'
****
'பதுங்குக் குழிக்கு நெட்டிசன்கள் புதுப் பெயர் வைத்திருக்கிறார்கள், மன்னா!'
'என்ன பெயர்?'
'உயிர் காக்கும் உன்னத குகை!'
****
'இது, இடிச்ச காயம் இல்ல... பொண்டாட்டி அடிச்ச காயம்னு டாக்டர் எப்படி கரெக்டா கண்டு
பிடிச்சார்?'
'காயத்தோட தீவிரத்தை வச்சுதான்!'
****
'சிலைக்கடத்தல் ஆசாமியை எல்லா வழியிலும் விசாரிச்சுப் பார்த்தாச்சு, சார்!'
'என்ன சொல்றான்?'
'அடிச்சாக்கூட வாயைத் திறக்காம சிலை மாதிரி நிக்கறான், சார்!'
-வி.ரேவதி, தஞ்சை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.