அரசுத் தேர்வுகளில் சாதித்த மாற்றுத்திறனாளி!

தனது தாய் அளித்த ஊக்கத்தால் அரசுத் தேர்வுகளில் தனது திறமையை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளார்
அரசுத் தேர்வுகளில் சாதித்த மாற்றுத்திறனாளி!
Updated on
1 min read

தனது தாய் அளித்த ஊக்கத்தால் அரசுத் தேர்வுகளில் தனது திறமையை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளார் தருமபுரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான வெண்ணிலா (27).
 ஒவ்வொருவருக்கும் தனித் திறமை உண்டு. அவர்களின் திறமையைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதில்தான் அவர்களின் வெற்றியின் ரகசியம் உள்ளது என்பதை உணர்ந்த வெண்ணிலாவின் தாய் மலர்க்கொடி, மாற்றுத்திறனாளியான தனது மகளின் மனதில் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவை விதைத்து, தன்னம்பிக்கையால் அதை துளிர்விடச் செய்துள்ளார்.
 தருமபுரி அப்பாவு நகரில் வசிக்கும் வெண்ணிலாவின் தந்தை பழனி லாரி உரிமையாளர். இரண்டு சகோதரிகள், ஒரு தம்பி. சில நாள்களுக்கு முன்பு தாயை இழந்த சோகத்தில் இருந்த வெண்ணிலா கூறியது:
 குழந்தைப் பருவத்தில் தடுப்பு மருந்தால் ஏற்பட்ட காய்ச்சலால் எனது இரு கால்களின் பலத்தை இழந்தேன். ஆனால், தன்னம்பிக்கையின் மூலம் மன பலத்தை ஊட்டினார் எனது தாய். பள்ளிப் பருவத்திலேயே ஆசிரியராக வேண்டும் என்ற கனவை எனது மனதில் விதைத்தார் அவர்.
 பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் அப்பா அழைத்துச் செல்வார். கல்லூரிக்கு ஆட்டோவில் சென்று வந்தேன். நடக்க இயலாததால் பள்ளியிலும், கல்லூரியிலும் உடன் பயின்ற நண்பர்கள் என்னைத் தினமும் வகுப்பறைக்கு தூக்கிச் செல்வார்கள். இதனால், அங்கு எனக்கு அன்பும், ஆதரவும் கிடைத்தது.
 பள்ளிப் படிப்பை முடித்த நிலையில், தாயின் கனவை நிறைவேற்ற ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர்ந்தேன். 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் பட்டயப் படிப்புத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றேன். கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் பெற்றேன்.
 தொடர்ந்து, அஞ்சல் வழிக் கல்வி மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணிதப் பாடப் பிரிவில் இளநிலைப் பட்டப் படிப்பு பயின்றேன். 2010-ஆம் ஆண்டு தேர்வில் 72 சத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன்.
 அதோடு நிற்காமல், தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்வியியல் பட்டப் படிப்பில் சேர்ந்தேன். அதில் 82 சத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன். கல்லூரிகளுக்குச் சென்று படித்து வந்தாலும், மாலையில் வீட்டின் அருகே உள்ள மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்தேன்.
 கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு பிரிவு- 1 மற்றும் 2 ஆகிய தேர்வுகளை முதல் முறையாக எழுதினேன். இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்றேன்.
 தாயின் கனவை நிறைவேற்றும் விதமாக ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வுக்காக காத்திருக்கிறேன் என்றார் அவர்.
 அனைத்துத் தேர்வுகளிலும் வெற்றி பெற்றது குறித்து வெண்ணிலா கூறியது:
 "முழு ஈடுபாட்டுடன் படித்தேன். மாலையில் பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருவதன் முலம் அந்தப் பாடங்களில் என்னை ஒருமுகப்படுத்திக் கொண்டேன். இதுவே எனது வெற்றியின் ரகசியம்' என்றார் வெண்ணிலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com