அரகண்டநல்லூர் பகுதியில் இருந்து திருக்கோவிலூர் வரும் தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தில் வந்த டிராக்டர், பின்னர் மருத்துவமனை அருகில் உள்ள பாலத்தில் ஏறும்போது, பாரம் தாங்காமல் பின்னோக்கி இழுத்தது. இதில், நிலை தடுமாறி டிராக்டர் கரும்பு லோடுடன் குப்புறக் கவிழ்ந்தது. எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட இந்த விபத்து மருத்துவமனை அருகில் உள்ள பேருந்து நிறுத்ததில் நிகழ்ந்ததால், கீழே விழுந்து குவிந்து கிடந்த கரும்புக் கட்டுகளுக்குள் ஆட்கள் யாரேனும் சிக்கியிருப்பார்களோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. இதனால் உடனடியாக பொக்லைன் இயந்திரம் கொண்டுவரப்பட்டு கரும்புக் கட்டுகளை அகற்ற முயன்றனர். ஆனால், இயந்திரம் பழுதடைந்துவிடவே, பொதுமக்களே சுமார் 26 டன் கரும்புக் கட்டுகளை அகற்றினர். இறுதியில் வேறு ஒரு பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, கரும்புக் கட்டுகளோடு டிராக்டரையும் நிமிர்த்தி போடப்பட்டது. இதனிடையே மக்கள் அச்சத்துடனும் ஆர்வத்துடனும் யாரேனும் அடியில் சிக்கியிருக்கிறார்களா என்று பார்த்தனர். ஆனால், அங்கே இரண்டு இருசக்கர வாகனங்கள் மட்டும் அடியில் சிக்கி சேதமடைந்திருந்தது.