தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோவையில் இரட்டைக் கொலை: மனோகரனுக்கு தூக்கு தண்டனை

கோவையில், இரண்டு பள்ளிக் குழந்தைகளைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.

News image
Updated On :1 நவம்பர் 2012, 9:57 am

வேல்முருகன்

கோவையில், இரண்டு பள்ளிக் குழந்தைகளைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.

கோவையில் 2010ஆம் ஆண்டு முஸ்கான், ரித்திக் ஆகிய குழந்தைகளைக் கடத்திச் சென்று, முஸ்கானை பாலியல் பலாத்காரம் செய்து பிறகு இருவரையும் கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து அக்டோபர் 29ம் தேதி, இந்த வழக்கில் மனோகரன் என்பவர் குற்றவாளி என்று நீதிபதி எம்.பி.சுப்பிரமணியன் தீர்ப்பளித்திருந்தார். குற்றவாளிக்கான தண்டனையை இன்று அறிவித்த நீதிபதி, மனோகரனுக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் சாகும் வரை தூக்கிலிடுமாறு தீர்ப்பளித்தார்.

கோவை ஜவுளிக்கடை உரிமையாளர் ரஞ்சித். இவரது குழந்தைகள் முஸ்கான் (11), ரித்திக் (8). இருவரும், காந்திபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், 2010 அக்டோபர் 29-ஆம் தேதி குழந்தைகள் இருவரும் கடத்தப்பட்டனர். இதில், சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர், பொள்ளாச்சி அருகே உள்ள பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் இருவரும் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக குழந்தைகளை வேனில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஓட்டுநரான பொள்ளாச்சி, அங்கலங்குறிச்சியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த அவரது கூட்டாளி மனோகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2010 நவம்பர் 9-ஆம் தேதி குழந்தைகளைக் கொலை செய்த இடத்தைக் காட்டுவதற்காக மோகனகிருஷ்ணனை போலீஸார் வேனில் அழைத்துச் சென்றனர். கோவை செட்டிபாளையம் அருகே போலீஸ் வேன் சென்றபோது, தப்ப முயன்றதால் என்கவுன்ட்டரில் மோகனகிருஷ்ணன் சுட்டுக் கொல்லப்பட்டார்; மனோகரன் சிறையிலடைக்கப்பட்டார்.

மனோகரன் மீதான இந்த வழக்கு விசாரணை 2011 ஜூன் 23-ஆம் தேதி கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. வழக்கில் மொத்தமாக 121 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். 69 ஆவணங்களும், 38 சான்று பொருள்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

7 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை அரசுத் தரப்பில் 47 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில், 9 பேரிடம் மறு குறுக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. எதிர்த்தரப்பில் 6 பேர் சாட்சிகளாக அனுமதிக்கப்பட்டு 5 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

அக்டோபர் 22-ஆம் தேதியுடன் அரசுத் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.பி.சுப்பிரமணியன், அக்டோபர் 29-ஆம் தேதி தீர்ப்பு அளிப்பதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலையில் நீதிபதி முன், மனோகரனை போலீஸார் ஆஜர்படுத்தினர். அரசுத் தரப்பில் வழக்குரைஞர் சங்கரநாராயணன் ஆஜரானார். எதிர்த்தரப்பில் வழக்குரைஞர் ஷர்மிளா ஆஜரானார்.

இந்த வழக்கில் ஆள் கடத்தல், கூட்டுச் சதி, கற்பழித்தல், கொலை செய்தல், சாட்சியங்களை சிதைத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ், சாட்சிகளின் விசாரணை அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் மனோகரனைக் குற்றவாளி என்று அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். இத் தீர்ப்பு குறித்து தான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என நீதிபதியைப் பார்த்து மனோகரன் கூறினார்.

மனோகரனுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை அளிக்க வேண்டுமென அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு வழக்குரைஞர் சங்கர நாராயணன், ஏற்கெனவே இதுபோன்று குழந்தைகளைக் கடத்தி, கற்பழித்துக் கொலை செய்த 2 வழக்குகளில் உயர் நீதிமன்றமும், 5 வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளித்துள்ளது. மேலும், இதேபோல் ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியதை, உச்ச நீதிமன்றம் விசாரித்து தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.