சிவகங்கை, செப்.9: சிவகங்கை அருகே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முதல்வர் தொடங்கி வைத்த அரசு பஸ் சேவை நிறுத்தப் பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றொரு அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். சிவகங்கையிலிருந்து கருங்காலக்குடி, பேச்சாத்தக்குடி, ஒய்யவந்தான் ஆகிய கிராமங்கள் வழியாக காளையார்கோயிலுக்கு அரசு டவுண் பஸ் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் முதல்வர் ஜெயலலிதா புதிய பஸ் சேவைகளை தொடங்கி வைத்தபோது மேற்கண்ட பஸ் சேவையையும் தொடங்கி வைத்தார். இந் நிலையில் இந்த பஸ் சேவை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டதால் மேற்கண்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர். இப் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக் கொடுத்து வலியுறுத்தியும் எந்த பலனும் இல்லை என கிராம மக்கள் தெரிவித்தனர். இந் நிலையில் சிவகங்கையிலிருந்து காளையார்கோயிலுக்கு மற்றொரு வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு டவுண் பஸ்சை பேச்சாத்தக்குடி விலக்கு பகுதியில் இக் கிராம மக்கள் சிறைபிடித்து தங்களது கிராமத்துக்கு நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். தகவல் கிடைத்து சிவகங்கை அரசு போக்குவரத்துக்கழக கிளை அலுவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளை முதல் நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து சிறைபிடித்து வைத்திருந்த அரசு பஸ்சை கிராம மக்கள் விடுவித்தனர்.