இரண்டு இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்ற வழக்கில் விசாரணையைச் சந்தித்து வந்த தங்கள் நாட்டைச் சேர்ந்த 2 கடற்படை வீரர்களும் இந்தியா திரும்ப மாட்டார்கள் என்று இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த கடற்படை வீரர்களான மாசிமிலானோ லாட்டோர், சால்வடோர் கிரோன் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேரளக் கடற்பகுதிக்கு அருகே துப்பாக்கியால் சுட்டதில் இரு இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கடற்படை வீரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, கொச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இத்தாலியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக தாயகம் செல்ல அனுமதிக்குமாறு அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் கோரினர். அவர்களது கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம் இருவரும் இத்தாலி சென்று 4 வாரங்கள் தங்கியிருக்க அனுமதியளித்தது. அதன் பின் இந்தியா திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில், மாசிமிலானோ லாட்டோரும், சால்வடோர் கிரோனும் இந்தியா திரும்ப மாட்டார்கள் என்று இத்தாலி அரசு திங்கள்கிழமை இரவு அறிவித்தது. அவர்களைக் கைது செய்ததன் மூலம் சர்வதேச உரிமைகளை இந்தியா மீறிவிட்டதாக இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









