மத்திய அரசின் நிறுவனமான ராஜிவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் காரைக்கால் மாவட்டம் கருக்களாச்சேரி பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கொடுவா மீன், கல் நண்டு, இறால் உள்ளிட்டவை வளர்த்து பயிற்சி மற்றும் ஏற்றுமதி செய்துவருகிறது. முதல் முறையாக கடலில் இருந்து விறால் மீன் குஞ்சு கொண்டுவரப்பட்டு, குட்டையில் கூண்டு அமைத்து உப்பு மற்றும் நன்னீர் கலந்த தண்ணீரில் கடல் விறால் மீன் வளர்க்கப்பட்டது. இவை கடல் விறால் மீன் எடையைக் காட்டிலும் கூடுதலாக வளர்ந்துள்ளது. இது சாதனையான ஒன்று என அந்நிறுவனம் சனிக்கிழமை அறிவித்தது.தஞ்சாவூர் கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், காரைக்கால் மீன்வளத்துறை மற்றும் மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை, ராஜிவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் இணைந்து, காரைக்காலை சேர்ந்தோருக்கு கடந்த 5 நாள்களாக கொடுவா மீன் மற்றும் இறால் வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்தது. இப்பயிற்சி முகாம் சனிக்கிழமை முடிவடைந்தது. பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஜெ.அசோக்குமார் கலந்துகொண்டார். மையத்தில் கடல் விறால் மீன் வளர்த்து சாதனை படைத்தமைக்கு மாவட்ட ஆட்சியர் மையத்தின் அதிகாரிகளை பாராட்டினார். அவர் விவசாயிகளிடையே பேசும்போது, வளர்க்கப்படும் மீன்கள் யாவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யமுடியும். விளையாட்டாக வளர்ப்பில் ஈடுபடாமல் தொழில்ரீதியாக ஆர்வமாக மீன்வளர்க்க முன்வருவோருக்கு தேவையான உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.