சென்னை ஸ்டேன்லி அரசு பொதுமருத்துவமனை முன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
காசிமேடு துறைமுகத்தில் எண்ணூருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இந்நிலையில் காசிமேடு இந்திராநகரைச் சேர்ந்த தேசப்பனின் ஒன்றரை வயது குழந்தை சந்தோஷ், ஒரு பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்து நேற்று(வெள்ளிக்கிழமை) இறந்தான்.இறந்த குழந்தையின் சடலம், பிரேத பரிசோதனைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து மீன்பிடி துறைமுகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட குழந்தையின் சடலத்தை வாங்க மறுத்து, இந்திராநகர் பகுதி மக்கள் ஸ்டேன்லி அரசு மருத்துவமனை முன் பாரதி சாலையில் இன்று திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கு சாலைப் பணியை தொடங்குவதற்கு முன்பு பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் செய்யப்படாதாததை கண்டித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், ஒப்பந்தகாரர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதில் சமாதானமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர். இப் போராட்டத்தால் அப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.