தமிழக காவல்துறையைக் கண்டித்து வரும் 10-ம் தேதி (திங்கள்கிழமை) நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று தமிழ்நாடு, புதுவை வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் பி.பரமசிவம் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரூர் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவரும் பார் கவுன்சில் உறுப்பினரும், கூட்டமைப்பின் துணைத் தலைவருமான மாரப்பன் என்பவர் தலைமையில் 17 வழக்குரைஞர்கள் கடந்த மே 10-ம் தேதி கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.அங்கு ஒரு விடுதியில் தங்கியிருந்த வழக்குரைஞர்களிடம், விடுதி பணியாளர்கள் கூடுதல் கட்டணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு வழக்குரைஞர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே, விடுதியின் உரிமையாளர் வழக்குரைஞருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வழக்குரைஞர்கள் கன்னியாகுமரி மாவட்டம் 5 கிராமம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஜூன் 6-ம் தேதி மாரப்பன் உள்ளிட்ட 17 வழக்குரைஞர்கள் மீது 5 கிராம காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒரு மாதம் கழித்து பொய்யான வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினரின் தவறான போக்கு குறித்து தமிழக காவல்துறைத் தலைவரிடம் முறையிடுவதற்காக வழக்குரைஞர்கள் சிலர் வியாழக்கிழமை (ஜூன் 6) சென்னை சென்றுள்ளனர்.ஆனால் அவர்களை காக்க வைத்த காவல்துறைத் தலைவர் பின்னர் சந்திக்க முடியாது என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார். எனவே தமிழக காவல்துறையினர், வழக்குரைஞர்கள் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி, விரோதப் போக்கைக் கண்டித்து திங்கள்கிழமை (ஜூன் 10) ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் தமிழகம், புதுவையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சுமார் 60 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளதாக பரமசிவம் கூறினார். சங்கத்தின் செயலர் கே.என்.பி.ரகுநாதன், பொருளாளர் பி.என்.மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.