அரசுப் பேருந்து மீது கல்வீசித் தாக்குதல்: சித்த மருத்துவர் பரிதாப சாவு

சேலத்தில் அரசுப் பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஜன்னலோரத்தில் அமர்ந்து பயணம் செய்த
Updated on
1 min read

சேலத்தில் அரசுப் பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஜன்னலோரத்தில் அமர்ந்து பயணம் செய்த சித்த மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா, புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (40). சித்த மருத்துவரான இவர், சிதம்பரம் அருகேயுள்ள திருப்புவனத்தில் உள்ள நோயாளிக்கு நேற்று (வியாழக்கிழமை) மருந்து கொண்டு வந்துள்ளார். அதைக் கொடுத்துவிட்டு சிதம்பரத்தில் இருந்து சேலம் வருவதற்காக அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

செல்வம் வந்த பேருந்து நேற்று நள்ளிரவு, வாழப்பாடியை அடுத்துள்ள முத்தம்பட்டி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது. ஓட்டுநரில் இருந்து 5-வது இருக்கையில் ஜன்னலோரத்தில் செல்வம் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த சிலர் அரசுப் பேருந்து மீது கற்களை வீசித் தாக்கியுள்ளனர். அவர்கள் வீசிய கற்களில் ஒன்று சித்த மருத்துவர் செல்வத்தின் தலையை பலமாகத் தாக்கியது.

இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் அவரை அதே பேருந்தில் சேலம் அதிநவீன அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக வாழப்பாடியைச் சேர்ந்த சரவணன், இளையராஜா, மாணிக்கம் ஆகியோரைப் பிடித்து விசாரிக்கின்றனர். காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் இவர்கள் மூவரும் பாமகவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

 கல்வீச்சில் உயிரிழந்த செல்வத்துக்கு ஜோதி என்ற மனைவியும் முதல் வகுப்பு படிக்கும் ஜோதிபிரசாத் (7) என்ற மகனும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com