.கடலூர் மாவட்டத்தில் தேர்வு நேரத்தில் வேலைபார்த்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பகுதி நேர ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமாரிடம் அண்மையில் அளித்த மனுவில்:-
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் மூலம் கல்வித்துறையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 16, 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.அவர்களுக்கு வாரம் 3 அரை நாள் வீதம் 12 அரை நாட்கள் பணிபுரிந்தால் மாத தொகுப்பூதியம் ரூ.5,000 வழங்கப்படும் என்று அரசாணை உள்ளது. விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முழு தொகுப்பூதியமான ரூ.5,000 ஏப்ரல் மாத ஊதியமாக வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் 9 நாட்கள் ஊதியத்தை மட்டுமே வழங்கி இருக்கிறார்கள். பல தலைமை ஆசிரியர்கள் 12 அரை நாட்களுக்கு மேல் முதன்மைக்கல்வி அலுவலர் வாய்மொழி உத்தரவின்பேரில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது மாலை நடைபெற்ற பள்ளிக்கு ஆசிரியர்கள் தேர்வு பணிக்கு சென்றதால் பகுதி நேர ஆசிரியர்களை வைத்து பாடம் நடத்தி உள்ளனர்.
ஆனால் அவர்களுக்கு 9 நாட்கள் ஊதியத்தை மட்டுமே வழங்குகிறார்கள்.வருகை பதிவேட்டில் 12 அரை நாட்களுக்கு மட்டுமே கையெழுத்திட அனுமதிக்கிறார்கள். மாதம் முழுவதும் பள்ளி அலுவலக மற்றும் இதர பணிகளை செய்ய தலைமை ஆசிரியர்கள் வற்புறுத்துகிறார்கள். இதனை கல்வித்துறை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை. ஆகவே ரூ.5,000 தொகுப்பூதியத்தை முழுமையாக மாதம் முதல் தேதியில் வழங்கிடவும், அலுவலக பணிகள் செய்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.