சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இளம்பெண்ணைக் கொன்று பெட்டியில் அடைத்து எரித்த மர்ம நபர்களை ஏத்தாப்பூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஆத்தூர் அருகேயுள்ள புத்திரகவுண்டம்பாளையத்தில் சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இஸ்லாமியர்களுக்கான மயானம் உள்ளது. இந்த மயானத்தை ஒட்டி ஒரு பெட்டி எரிந்த நிலையில் இருப்பதை இன்று காலை அந்த வழியாகச் சென்றவர்கள் கண்டனர். அருகில் சென்று பார்த்தபோது அந்த பெட்டிக்குள் இளம் பெண்ணின் சடலம் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து உடனடியாக ஏத்தாப்பூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வாழப்பாடி டி.எஸ்.பி. மாதவன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது எரிந்து கொண்டிருந்த பெட்டிக்கு அருகில் அந்த பெண் அணிந்திருந்ததாக கருதப்படும் ஆடை கிடந்தது கைப்பற்றப்பட்டது.
இறந்த பெண்ணுக்கு சுமார் 25 வயதுக்குள் இருக்கும் எனவும் காலில் மெட்டி அணிந்திருப்பதால் அவர் திருணமானவராக இருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது. இளம்பெண்ணை கடத்தி வந்த மர்ம நபர்கள் அவரை கொலை செய்து பெட்டியில் அடைத்து சாலையோரத்தில் வைத்து எரித்துச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.
இறந்தவர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து ஏத்தாப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.