காற்றழுத்த தாழ்வு நிலை சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கடலூர்- நாகை இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 12 மணி அளவில் கரையை கடந்துவிட்டதாக வானிலை மையம் அறிவித்தது.இந்த அறிவிப்பு 1 மணி அளவில் வெளியானது. தொலைக்காட்சியை பார்த்து விஷயத்தை தெரிந்துகொண்ட மக்கள், காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்ததற்கான அறிகுறியே இல்லை என ஆச்சரியப்பட்டனர்.
அதே நேரத்தில் வெளியூர்களில் உள்ள உறவினர்களும், நண்பர்களும் செல்போனில் அழைத்து, புயல்(காற்றழுத்த தாழ்வு நிலைக்கு உறவினர்கள் அறிந்த பதம்) கரையை கடந்துவிட்டதாமே, ஏதாவது பாதிப்பா? பாதுகாப்பாக இருக்கிறீர்களா? காலையில் சாப்பிடீங்களா? சாப்பிட கடை இருக்கா? என நலம் விசாரித்தனர். காற்றழுத்த தாழ்வு நிலையால் கடற்கரைக்கு மிக அருகாமையில் உள்ள கடலூர் நகரம் சில மணி நேரம் மட்டும் இயல்பு நிலையிலிருந்து சில மணி நேரம் மட்டுமே மாறி இருந்தது.
மதியம் 1 மணிக்கு பிறகு வெயில் அடிக்க தொடங்கியதும், ஆங்காங்கே தெருக்களிலும், டீக் கடைகளிலும் கூடிய மக்கள், புயல் கரையை கடந்ததாக ரமணன்(வானிலை ஆய்வு மைய இயக்குநரை இப்படிதான் மக்கள் அழைக்கிறார்கள்) கூறியதை பகிர்ந்துகொண்டனர்.சுனாமி, தானே புயலால் அதிர்ந்து போயிருக்கும் கடலூர் மக்கள், இனி எப்ப புயல் வந்தாலும், இப்ப வந்த மாதிரி வந்துட்டு போயிட்டா நல்லா இருக்கும் என ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.