விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டே முக்கால் வயது சிறுமியின் சடலம் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர், பெருமாள்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்தவர் எஸ்.கண்ணன் மகன் சங்கர். சங்கர், இங்குள்ள வள்ளுவர் வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வேனில் நடத்துனர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கருப்பசாமி (5) என்ற மகனும், இந்து காவியா என்ற இரண்டே முக்கால் வயது மகளும் உண்டு. கருப்பசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி திரு.வி.க. தொடக்கப் பள்ளியி்ல 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இந்து காவியாவை சனிக்கிழமை இரவு காணவில்லை என்று அவரது தாய் செல்வி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார். போலீஸார் நன்றாக தேடிப் பாருங்கள். கேபிள் டி.வி.யில் இது குறித்து விளம்பரம் செய்வோம் என்று கூறி அனுப்பியுள்ளார்கள்.
இதற்கிடையை ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பூவாணி விலக்குக்கை அடுத்து ஒரு கல்குவாரியை ஒட்டிச் செல்லும் சாலை ஓரம் ஒரு சிறுமியின் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து சங்கரைக் கூட்டிச் சென்று காட்டினர். அது தனது மகள் தான் என்று அவர் அடையாளம் காட்டினார்.
சங்கருக்கும் பக்கத்துவீட்டில் கணவரை இழந்து வாழும் அகிலா என்ற பெண்ணிற்கும் தவறான பழக்கம் இருந்துள்ளது. மேலும் இதே பெண்ணிடம் வேறொரு நபரும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதில் ஏற்பட்ட விரோதத்தில் இந்தக் குழந்தை கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.