திருநெல்வேலி அருகே புதன்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் இளைஞரிடம் இருந்த ரூ. 60 லட்சத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை, வருமானவரித்துறை அதிகாரிகளை விசாரணை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி அருகே அபிஷேகபட்டியில் வட்டாட்சியர் ஏ.எஸ். அபுல்காசீம் தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொலிரோ காரை சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆலங்குளத்தை சேர்ந்த ரா. வீரபத்திரன் (35) என்பவர் ரூ. 60 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும்படை அதிகாரிகள் காருடன் பணத்தை பறிமுதல் செய்து திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து வருமானத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் வீரபத்திரன் திருநெல்வேலி நகரில் இயங்கும் அக்சிஸ் வங்கியில் இருந்து ரூ. 60 லட்சம் எடுத்துக் கொண்டு ஆலங்குளத்தில் 3 ஏக்கர் நிலம் கிரையம் செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரி பாரதி கணேஷ் தலைமையில் அதிகாரிகள் வீரபத்திரனிடம், பணத்திற்கு உரிய ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்தினர். வாகனச் சோதனையில் ரூ. 60 லட்சம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.