ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தெனாலிராமன் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்: தெலுங்கு மக்கள் பேரவை வழக்கு

இது தொடர்பாக அந்தப் பேரவையின் தலைவர் பாலகுருசாமி மற்றும் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு

News image
Updated On :11 ஏப்ரல் 2014, 2:46 pm

நாகராஜன்

தெனாலிராமன் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

  இது தொடர்பாக அந்தப் பேரவையின் தலைவர் பாலகுருசாமி மற்றும் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் காமெடி நடிகர் வடிவேலு நடிப்பில் தெனாலிராமன் என்ற படத்தை தயாரித்துள்ளது.

  அந்தப் படம் விஜயநகர அரசர் தெனாலிராமனை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்தப் படத்தை திரையிட்டுக் காட்டுமாறு ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அதற்கு அவர்கள் கிருஷ்ணதேவராயரை தவறாக சித்தரிக்கவில்லை என பதில் அளித்தனர். 

 ஆனால், படத்தின் கதாநாயகரான காமெடி நடிகர் வடிவேலு, கிருஷ்ணதேவராயராக நான் நடிக்கவில்லை எனவும், வேங்கை மன்னன் என்ற கதாபாத்திரத்தில் மட்டும் நடித்துள்ளதாகவும் ஒரு பேச்சில் தெரிவித்தார். ஆனால், சென்ஸர் சான்றிதழில் கிருஷ்ணதேவாரயர் மற்றும் தெனாலிராமன் கதாபாத்திரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தெரிவித்த தகவல்கள் மாறுபட்டவையாக உள்ளன.

 வரலாற்றுக் கதை என்றால், வரலாற்று ஆவணங்கள் மற்றும் புத்தகத்தின் அடிப்படையில் படத்தை எடுக்கலாம். ஆனால், ஏ.ஜி.எஸ். நிறுவனம் கிருஷ்ணதேவராயரின் உண்மையை மறைத்து வணிக நோக்கத்துக்காக இந்தப் படத்தை எடுத்துள்ளனர். அவர்களது சொந்த கருத்தில், உண்ணை வரலாற்றை திரித்து, தவறான நிகழ்வை உருவாக்கி படத்தை தயாரித்துள்ளனர்.

 மேலும், பட நிறுவனமும், இயக்குனரும் தெலுங்கு அமைப்புகளுக்கு படத்தை திரையிட்டுக் காண்பிப்பதாக தெரிவித்தனர். ஆனால், அதற்கான நடவடிக்கையை எடுக்காமல் ஏப்ரல் 18-ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

  எனவே, தெனாலிராமன் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும். தெலுங்கு அமைப்புகளுக்கு அந்தப் படத்தை திரையிட்டுக் காண்பிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

 இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை (ஏப்.11) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வேறு அமர்வு இந்த வழக்கை மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.