வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எஸ்.சுப்புராஜ், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கனகுஅம்மாள் ஆகியோர் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கும் வீடு வீடாகச் சென்று அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை விநியோகித்து, தொகுதியில் போட்டியிடும் வசந்தி முருகேசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். மேலும் தெரு முனைகளில் நடைபெறும் பிரச்சாரத்தில் பேசுகையில் ஒன்றியச் செயலாளர் எஸ்.சுப்புராஜ் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதா இடைத் தேர்தலில் ஆண்டிபட்டியில் நின்றார். அப்போது வருஷநாடு மலைப் பாதையில் சாலை அமைக்க தமிழக அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் உடனே சாலை அமைக்கப்படும் என்று அறிவித்து, இரண்டாவது முறையாக முதல்வர் ஆன உடனே நிதி ஒதுக்கி சாலையை அமைத்துத் தந்தார். ஆனால் கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் காழ்ப்புணர்ச்சியால் மலையில் மீதமுள்ள சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. இதனால் இப் பகுதி வளர்ச்சி அடையாமல் உள்ளது. நாற்பது தொகுகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றால், மத்தியில் அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் அரசு அமையும் பட்சத்தில் உடனடியாக இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு இப் பகுதி எல்லா வளமும் பெறும். வாக்காளர்கள் தங்களது வாக்கை மற்ற கட்சிகளுக்கு அளித்து வீணாக்காமல், அ.தி.மு.க.விற்கு வாக்களித்து இப் பகுதி எல்லாத் துறையிலும் வளர்ச்சி பெற உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.