கடந்த 10 ஆண்டுகளாக தமிழக வளர்ச்சித் திட்டங்களைப் புறக்கணித்த மத்திய காங்கிரஸ் அரசை தமிழக மக்கள் முழுமையாகப் புறக்கணிப்பது உறுதி என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன். நாகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தியாளர்களுக்கு பேட்டி :
நாகை- கூடலூர் தேசிய நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக மாற்ற வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தை காங்கிரஸ் அரசு கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்த முன்வரவில்லை. நாகை, கடலூர், குளச்சல் துறைமுகங்களை பெரிய துறைமுகங்களாக மாற்றும் திட்டத்துக்கும் காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நாட்டின் ஒரு பகுதியில் வளர்ச்சியும், மறுபகுதியில் இயற்கை சீற்றங்களால் அழிவும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையை மாற்ற தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அவசியம். இத்திட்டத்தை நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசால் மட்டுமே செயல்படுத்த முடியும்.
பாஜக கூட்டணியில் தற்போது மதிமுக, கொங்குநாடு மக்கள் கட்சி ஆகியன இடம் பெற்றுள்ளன. விரைவில் பாஜக கூட்டணி மேலும் வலிமைப் பெறும். கூட்டணி இறுதி செய்யப்பட்ட பின்னரே தொகுதிப் பங்கீடுகள் நடைபெறும். தேசிய அளவில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். பாஜகவின் வாக்கு வங்கி சதவீதம் தொடந்து அதிகரித்து வருகிறது. இந்த வாக்கு வங்கி மேலும் உயரும்.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தைப் புறக்கணித்த மத்திய காங்கிரஸ் அரசை தமிழக மக்கள் முழுவதுமாக புறக்கணிப்பது உறுதி. பாஜக தலைமையிலான கூட்டணி மட்டுமே தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்.
கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் முருகானந்தம், மாவட்டச் செயலாளர் டி. வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.