நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய கட்சியோடு கூட்டணி: பண்ருட்டி தி.வேல்முருகன்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய கட்சியோடு கூட்டணி வைத்து தமிழகஅரசியல் களத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி மிகப்பெரிய அங்கீகாரம் பெரும் என தமிழக வாழ்வுரிமை கட்சி


நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய கட்சியோடு கூட்டணி வைத்து தமிழகஅரசியல் களத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி மிகப்பெரிய அங்கீகாரம் பெரும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் மு.முடிவண்ணன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஆ.ரமேஷ் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர்கள் கே.ஆர்.ஜி.தமிழ், வாசு.சரவணன், ச.கோபு, என்.எஸ்.டி.தில்லை, இ.கரிகாலன், ம.கஜேந்திரன், கி.பரசுராமன், ஆண்டவர் செல்வம், கோ.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறுவனர் தி.வேல்முருகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:
தமிழக வாழ்வுரிமை கட்சி தமிழகத்தில் மாபெரும் அரசியல் சக்தியாக வளர்ந்து வருவதை ஆண்ட கட்சி, ஆளும் கட்சி தெரிந்து கொள்ள கிராமங்களிலும், வீடுகள் தோறும் கொடிகள் ஏற்றி சுறு, சுறுப்பாக உழைக்க வேண்டும். த.வா.கவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. தமிழக வாழ்வுரிமை கட்சி மக்கள் சக்தியாக திகழும்.
திமுக, அதிமுக ஆகிய பெரிய கட்சியோடு கூட்டணி வைக்க வேண்டும் என்றால் அக்கட்சிகளின் மாவட்டம், ஒன்றியம், நகரம் உங்கள் வீடு தேடி வர வேண்டும். நமது வாக்கு வங்கிகளை எதிர்கள் அரிந்து எடை போட்டு மதிக்க வைக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட சமூகத்தினரையும், வன்னியர் சமுதாயத்தினரையும் மோதவிட்டு அரசியல் லாபம் தேடுபவர் ராமதாஸ். ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் அதிகாரத்தில் இருந்த போது எத்தனை வன்னியர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தந்தனர். பாமகவினர் மீது பல்வேறு வழக்குகளைதான் பெற்று தந்தனர்.
வேல்முருகன் ஊழலுக்கு எதிரானவன், நேர்மையானவன், தமிழர் உரிமைக்காக போராடுபவன் என்பதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். கட்சி தொடங்கி 9 மாதத்தில் ஆம்ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சியை பிடித்துள்ளது. ஏன் நாம் பிடிக்க முடியாது. சமீபத்தில் கூடங்குளத்திற்கு வந்த ஆம்ஆத்மி கட்சி அரசியல் ஆலோசகர் என்னை சந்தித்து உங்களது நடவடிக்கைகளை உற்று நோக்கி வருகிறோம். எனவே எங்களிடம் கைகோர்த்து விடுங்கள் என கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பலம் பெற்றுள்ள நாம் மாற்று அரசியலை நோக்கி செல்கிறோம். இன்னும் கொஞ்சம் காலத்தில் தமிழகத்தில் மாற்று அரசியல் வரும் என தி.வேல்முருகன் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் மரு.வை.காவேரி, மாநில அமைப்பு செயலாளர் மே.ப.காமராஜ், மாநில இணைப் பொதுச்செயலாளர் எம்.எஸ்.சண்முகம், தலைமை நிலைய செயலாளர் கனல் உ.கண்ணன், மாநில நிர்வாகக்குழு ச.க.ராஜேந்திரன், மாநில மதியுரை குழு மு.பாலகுருசாமி, மாநில மாணவரணி தலைவர் ரவி.பிரகாஷ், மாநில தமிழர்படை தளபதி வே.க.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். சிதம்பரம் நகரச் செயலாளர் கோவி.தில்லைநாயகம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...