இந்நாளில் முன்னிரவில் உறங்காது இருந்து அதிகாலையில் பெருமாள் கோயில்களில் அன்று மட்டும் திறக்கும் வடக்குத் திசையில் உள்ள பரமபத வாயில் என்றழைக்கப்படும் வாயில் வழியே சென்று இறைவனை வழிபடுவர். இந்நாளில் வழிபடுவோருக்கு பரந்தாமனின் பூரண அருள் கிடைக்கும் என்றும், நீங்காப் புகழுடன் அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழலாம் என்பதும் ஐதீகம்.
108 வைணவத் திருத்தலங்களில் 23-வது திருத்தலமாக தில்லை திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீகுலசேகர ஆழ்வாரும், ஸ்ரீதிருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சனிக்கிழமை கோவிந்தராஜப்பெருமாளுக்கு காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆண்டாள் அருளித்த திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டன. பின்னர் உற்வச மூர்த்தி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பரமபாத வாசலில் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் பூதேவி, ஸ்ரீதேவி, ஸ்ரீஆண்டாள் சமேத ஸ்ரீதில்லைகோவிந்தராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.