ஜெயலலிதா பிரதமரானால் இந்தியா வல்லரசாக உருவாகும்: சி.ஆர்.சரஸ்வதி

ஜெயலலிதா பிரதமரானால் இந்தியா வல்லரசு நாடாக உருவாகும் என்றார் சமூகநல வாரிய தலைவர் சி.ஆர்.சரஸ்வதி.
ஜெயலலிதா பிரதமரானால் இந்தியா வல்லரசாக உருவாகும்: சி.ஆர்.சரஸ்வதி
Updated on
1 min read

ஜெயலலிதா பிரதமரானால் இந்தியா வல்லரசு நாடாக உருவாகும் என்றார் சமூகநல வாரிய தலைவர் சி.ஆர்.சரஸ்வதி.

 கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

 கூட்டத்துக்கு மாவட்ட மாணவர் அணி செயலர் கே.மகேஷ் தலைமை வகித்தார். .  தலைவர் எஸ்.பி.ரமேஷ், துணைத்தலைவர்கள் மணியரசன், யோகேசுவரன், தேவபிரசாத், ஜெயபிரகாஷ், மகேந்திரன், பொருளாளர் சி.வி.ரமேஷ்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், நகர  செயலருமான குமரன் வரவேற்று பேசினார்.

 மகளிர் அணி துணைச்செயலரும், தமிழ்நாடு சமூக நலவாரிய தலைவருமான சி.ஆர்.சரஸ்வதி பேசியது: ஒரு கருணாநிதி அல்ல, ஓராயிரம் கருணாநிதி எதிர்த்து வந்தாலும், வெற்றிவாகை சூடிவரும் தர்மதேவதை, மிகவிரைவில் மக்கள் ஆதரவுடன் இந்தியாவின் பிரதமராக அமர போகிறார்.

 ஏழை, எளிய, சாதாரண மக்களின் பசியாற்றும் மலிவுவிலை உணவகம் இந்தியா முழுவதும் திறக்கப்பட ஜெயலலிதா சுட்டிக் காட்டும் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட வேண்டும்.

 இந்தியாவின் பிரதமராக ஆந்திராவைச் சேர்ந்த நரசிம்மராவ் இருந்துள்ளார், கர்நாடகாவைச் சேர்ந்த தேவேகவுடா இருந்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த ஜி.கே.மூப்பனாருக்கு பிரதமராகும் வாய்ப்பு வந்தது, அதை கருணாநிதி கெடுத்து விட்டார்.

 இப்போது தமிழகத்துக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜெயலலிதாவை பிரதமராக அமர வைக்க வேண்டும், இதற்கு  அனைவரும் ஆதரவு தர வேண்டும்.

 ஜெயலலிதாவின் ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழகம் தலைசிறந்த மாநிலமாக திகழ்கிறது. கருணாநிதி ஆட்சியில் 16 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் இன்றைக்கு மின்வெட்டு இல்லாத மாநிலமாக திகழ்கிறது.

 ஜெயலலிதா பிரதமரானால் இந்தியா வல்லரசு நாடாக உருவாகும். எனவே நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வெற்றிதேடித்தர வேண்டும் என்றார்.

 முன்னதாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை பொருளாளர் அப்துல் அமீது, தலைமை கழக பேச்சாளர்கள் எஸ்.டி.கருணாநிதி, ஆவடி சலீம், தேவசகாயம், நெய்வேலி தொகுதி எம்எல்ஏ எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், நகர்மன்ற தலைவர் சி.கே.சுப்பிரமணியன், துணைத்தலைவர் ஜி.ஜே.குமார், ஒன்றிய செயலர்கள் பழனிச்சாமி, முத்துக்குமாரசாமி ஆகியோர் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com