நெல்லை மாவட்டத்தில் 4 அணைகளில் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு
நிகழ் கார் பருவ சாகுபடிக்கு வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாத சூழலில் அணைகளின் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை. இதனால் அணைகளில்


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி, அடவிநயினார், கருப்பாநதி ஆகிய 4 அணைகளில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு வியாழக்கிழமை தண்ணீர் திறக்கப்படுகிறது.
நிகழ் கார் பருவ சாகுபடிக்கு வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாத சூழலில் அணைகளின் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை. இதனால் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
அணைகளின் நீர்மட்டம்: புதன்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 59.75 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 72.77 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 62.25 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 50.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 67.50 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 58.50 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 45.22 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும் இருந்தது.
கார் பருவ சாகுபடிக்கு முதல் கட்டமாக மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் மதகு மூலம் பாசனம் பெறும் 2786 ஏக்கர் நிலங்களுக்கு மே மாதம் இறுதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை.இதனிடையே பாசனத்திற்கு அணைகளில் இருந்து திறக்க வேண்டு்ம் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் 4 அணைகளில் இருந்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கடனாநதி அணை மூலம் 9923 ஏக்கர் நிலங்களும், ராமநதி அணையின் மூலம் 4,944 ஏக்கர் நிலங்களும், அடவிநயினார் அணையில் 2147 ஏக்கர் நிலங்களும், கருப்பாநதி அணையின் மூலம் 9,500 நிலங்களும் பாசனம் பெறும் வகையில் வியாழக்கிழமை (ஜூலை 3 ஆம் தேதி) தண்ணீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 105 தினங்கள் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படும்.
பாபநாசம் ஜூலை 7 ல் திறப்பு? தாமிரவருணி பாசனத்தில் பாபநாசம் அணையின் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 11 கால்வாய்கள் வழியாக 86,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. கார் சாகுபடிக்கும், இப்பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழைப்பயிருக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணைகளின் நீர் இருப்பை பொறுத்து ஜூலை 7 ஆம் தேதி பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...