சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூலை 10, 11 தேதிகளிலும், பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கு ஜூலை 14,15,16 தேதிகளிலும், பிபிடி, பி.பார்ம் மற்றும் பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கு ஜூலை 17-ம் தேதியும் கவுன்சிலிங் நடைபெறுகிறது என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15 ஆண்டிற்கான பிஇ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் கடந்த மே.9-ம் தேதி முதலும், பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளில் சேர மே.12-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன்.11-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்பில் சேர 11654 பேர் விண்ணப்பித்துள்ளனர். பிஇ படிப்பில் சேர 2545 பேர் விண்ணப்பித்துள்ளனர். மருந்தியல் (பி.பார்மசி) பி.பி.டி., பிஎஸ்சி நர்சிங் படிப்புகளில் சேர 947 விண்ணப்பித்துள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15 கல்வி ஆண்டில் பிஇ படிப்பிற்கு 3 ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்சி வேளாண்மை படிப்பிற்கு ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்சி தோட்டக்கலை படிப்பிற்கு 75 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்துள்ளார்.
பிஎஸ்சி வேளாண்மை கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் (ஜூலை 4) சனிக்கிழமை வெளியிடப்படுகிறது. கலந்தாய்வு பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பு கடிதம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள் இணையதளத்தில் கலந்தாய்வு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவையல்லாமல் விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களுக்கு கவுன்சிலிங் குறித்து ஸ்பீட் போஸ்ட் மூலம் அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் மூலமும் தகவலும் அனுப்பப்பட்டுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தரவரிசைப்பட்டியல் குறித்தும், கவுன்சிலிங் அழைப்பு கடிதம் பதிவிறக்கம் செய்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய பல்கலைக்கழக இணையதளம் முகவரி www.annamalaiuniversity.ac.in