பாலஸ்தீனத்தில் முஸ்லிகள், குழந்தைகள், பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாலஸ்தீனத்தில் இரவு பகலாக முஸ்லிம்கள், பெண்கள், குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி சொன்று வருவதை இந்திய தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மேலப்பாளையம் சந்தை சந்திப்பில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் எஸ். மில்லத்இஸ்மாயில் தலைமை வகித்தார். அமைப்பின் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அ. அப்துல்வாஹித், என். ஷாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கையை வலியுறுத்தி அமைப்பின் பேச்சாளர் கே.எஸ். காசிம்பிர்தெளசி, மாநில செயலர் கே.எம். முகம்மதுமைதீன் ஆகியோர் பேசினர். இதில் மனிதநேய மக்கள் கட்சியின் வர்த்தக அணி மாவட்டச் செயலர் பேட்டை கே. ஷேக், மாவட்ட இளைஞரணி செயலர் எம். மீரான்மைதீன், மாவட்ட தொழிலாளரணி செயலர் கே. ரசூல்மைதீன், மேலப்பாளையம் பகுதித் தலைவர் அ. காஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.