விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில், திருஆடிப்பூர பெருவிழாவின் ஐந்தாம் திருநாளான சனிக்கிழமை இரவு ஐந்து கெருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீஆண்டாள் சன்னதி முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சி, ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் திருக்கோவில் ஆஸ்தான வித்வான் நடராஜ கம்பர் குழுவினரின் சிறப்பு நாதஸ்வரம் நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது. ஸ்ரீஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், ஸ்ரீரெங்கமன்னார், ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீசுந்தரராஜன், ஸ்ரீதிருவேங்கடமுடையான், ஸ்ரீதிருத்தங்கால் அப்பன் ஆகிய எம்பெருமான்கள் பெரிய திருவடி (கெருட) வாகனங்களிலும், ஸ்ரீபெரியாழ்வார் சிறய அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர். அப்போது ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என கோஷங்கள் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்.