சிதம்பரத்தில் சேக்கிழார் குருபூஜை விழா மற்றும் கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழார் விழா அறக்கட்டளை வெள்ளிவிழா ஞானப்பிரகாசர் வடக்குத்தெருவில் உள்ள சேக்கிழார் மணி மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சேக்கிழார் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவனடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் சேக்கிழார்.
சேக்கிழார் மீது அளவற்ற பக்தி கொண்ட தற்போது நியூயார்க்கில் வசிக்கும் ஜெயகாந்தம் துரைகண்ணு தம்பதியினர், 1989-ல் சேக்கிழார் அறக்கட்டளையை தொடங்கினர். 1999-ல் சிதம்பரம் ஞானப்பிரகாசர் வடக்குத்தெருவில் சேக்கிழார் மணி மண்டபத்தை கட்டி கொடுத்தனர். இச்சிறப்பு வாய்ந்த சேக்கிழார் குருபூஜையும், கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழார் விழா அறக்கட்டளை வெள்ளிவிழா சேக்கிழார் மணி மண்டபத்தில் திங்கள்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு சேக்கிழார் திருவுருவச்சிலை வீதி உலா நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற வெள்ளி விழாவிற்கு எஸ்.திருநாவுக்கரசு பிள்ளை தலைமை வகித்தார். பேராசிரியர் த.சுவாமிநாதன் வரவேற்றார். பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் பங்கேற்று விருத்தாசலம் வேத.ரவிகணேஷ் குருக்கள், மதுரை வேதரத்தினம் ஓதுவார், திருத்துவத்துறை முதும்பெரும் புலவர் ப.அரங்கசாமி ஆகியோருக்கு சேக்கிழார் விருதினை வழங்கி ஆசியுரையாற்றினார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இலக்கியத்துறை முன்னாள் தலைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் திருக்குறளும், திருத்தொண்டர் மாக்கதையும் என்ற தலைப்பில் பேரூரையாற்றினார். வெள்ளிவிழா மலரை வி.எஸ்.மணி வெளியிட, முதல்பிரதியை டாக்டர் ஆர்.முத்துக்குமரன் பெற்றுக் கொண்டார். விழாவில் ஏ.சம்பந்தம், வி.பாலதண்டாயுதம், டாக்டர் ஆர்.முத்துக்குமரன், ஆர்.கே.கணபதி, புதுவை தெ.முருகசாமி, ஆர்.சபாநாயகம், தி.பொன்னம்பலம், பனசைமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் உரையரங்கம், கவியரங்கம், இசையரங்கம், மகளிர் அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் க.சுவாமிநாதன், உறுப்பினர் டாக்டர் பத்மினி கபாலிமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.