அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாள் பயிற்சி புதன்கிழமை நிறைவு பெற்றது.மகாராஜபுரம், தம்பிபட்டி, கூமாப்பட்டி, துலுக்கபட்டி, சுந்தரபாண்டியம், மேலக்கோபாலபுரம், அயன்கரிசல்குளம், மேலப்பாளையம் ஆகிய 8 குறுவளமையங்களில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் 201 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் ஏற்படுத்தப்பட்ட செயல்பாடுகளான தரமான கல்வி, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், பள்ளி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல், அரசின் நலத்திட்ட உதவிகள், யோகா, நலவாழ்வு, சத்துணவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு செயல்பாடுகள் மூலம் பள்ளியில் உறுப்பினர்களின் பங்களிப்பு மற்றும் ஆர்வம் உணர்த்தப்பட்டது.
பயிற்சியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பரமேஸ்வரி பார்வையிட்டார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.