ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லை மாவட்டத்தில் அடை மழை: குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் 3 ஆவது நாளாக வியாழக்கிழமை நீடித்து வரும் அடை மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த கொள்ளளவை கொண்ட குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளம் நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

News image
Updated On :8 மே 2014, 12:41 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் 3 ஆவது நாளாக வியாழக்கிழமை நீடித்து வரும் அடை மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த கொள்ளளவை கொண்ட குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளம் நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 3 ஆவது நாளாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை பகலில் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில், வள்ளியூர், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, களக்காடு, முக்கூடல் உள்ளிட்ட பகுதியில் மழை நீடித்தது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

வியாழக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை: பாபநாசம் அணையில் 20 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 15 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 9 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 52.8 மி.மீ மழையும், ராமநதி அணையில் 6 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 13.3 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 25 மி.மீ மழையும், வடக்குபச்சையாறு அணையில் 14.4 மி.மீ மழையும், நம்பியாறு அணையில் 61 மி.மீ மழையும், கொடுமுடியாறு அணையில் 10 மி.மீ மழையும் பெய்துள்ளது.

இது தவிர அம்பாசமுத்திரத்தில் 12 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 6 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 18 மி.மீ மழையும், திருநெல்வேலியில் 5 மி.மீ மழையும், பாளையங்கோட்டையில் 10.4 மி.மீ மழையும், நான்குனேரியில் 54 மி.மீ மழையும், ஆய்க்குடியில் 8.2 மி.மீ மழையும், செங்கோட்டையில் 14 மி.மீ மழையும், தென்காசியில் 15.1 மி.மீ மழையும், சிவகிரியில் 15 மி.மீ மழையும், ராதாபுரத்தில் 61 மி.மீ மழையும், வீரகேரளம்புதூரில் 2 மி.மீ மழையும்  பதிவாகி உள்ளது.

கணிசமாக நீர்வரத்து:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடிப்பதால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1219 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 669 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 25 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 106 கனஅடியும்,

கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 212 கனஅடியும், குண்டாறு அணைக்கு விநாடிக்கு 69 கனஅடியும், வடக்குபச்சையாறு அணைக்கு விநாடிக்கு 113 கனஅடியும், நம்பியாறு அணைக்கு விநாடிக்கு 37.60 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 10 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

உயர்ந்து வரும் நீர்மட்டம்:

அணைகளுக்கு நீர்வரத்து இருப்பதால் குறைந்த கொள்ளளவு உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ராமநதி அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 61.00 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து 45.28 அடியாகவும், 36 அடி கொள்ளளவு உள்ள குண்டாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 32.47 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்து 40 அடியாகவும் இருந்தது.

வறண்டு காணப்பட்ட  வடக்குபச்சையாறு அணையின் நீர்மட்டம் 7.00 அடியும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 1 அடியும் உயர்ந்துள்ளது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடிப்பதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்திருப்பதால் வரும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் வரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவுக்கு அணைகளின்  நீர்மட்டம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.