/

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழக உழவர் முன்னணி கண்டனம்!

மூன்று பேர் கொண்ட மேற்பார்வைக்குழு அமைத்த பிறகுதான் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க முடியும் என தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, தமிழக உழவர் முன்னணி கண்டனம்

News image
Updated On :10 மே 2014, 1:42 pm

ஜி.சுந்தரராஜன்

மூன்று பேர் கொண்ட மேற்பார்வைக்குழு அமைத்த பிறகுதான் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க முடியும் என தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, தமிழக உழவர் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மூன்று பேர் கொண்ட மேற்பார்வைக்குழு அமைக்கப்பட்ட பிறகுதான் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க முடியும். தமிழகஅரசு தன்னிச்சையாக நீர் தேக்க முடியாது என தமிழக முதல்வர் கூறியிருப்பது, உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது. நீரிமன்ற எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு முல்லைப் பெரியாறு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை வெற்று காகிதமாக மாற்றிவிடும் ஆபத்துள்ளது. ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பை உழவர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

தலைமை நீதிபதி லோடா தலைமையிலான உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட ஆயம் 2014 மே 7 அன்று அளித்துள்ள தீர்ப்பில் எந்த இடத்திலும் மூன்று நபர் மேற்பார்வைக்குழு அமைத்த பிறகுதான், அவர்கள் முன்னிலையில்தான் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க வேண்டும் என கூறப்படவில்லை. தீர்ப்பில் தமிழ்நாடு மாநில அணையில் 142 அடி நீர் தேக்கிக் கொள்ளவோ அணையின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவோ, கேரள மாநிலஅரசு 2006-ல் தான் பிறப்பித்த இப்போது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. சட்டத்தை பயன்படுத்தியோ அல்லது வேறு வகையிலே குறுக்கிடவோ, தடை ஏற்படுத்தவோ கூடாது என நிரந்தர தடை ஆணை பிறப்பிக்கப்படுகிறது என தீர்ப்பில் தெளிவுபட கூறப்பட்டுள்ளது. 142 அடி நீர் தேக்கி கொள்ள தமிழகஅரசுக்கு உள்ள உரிமையையும் தங்கு தடை அற்றது என அறிவித்துள்ளது. தீர்ப்பு இவ்வளவு தெளிவாக இருக்கும் போது மத்தியஅரசும், கேரளஅரசும் அதிகாரியை நியமித்தப்பின் மூன்று நபர் மேற்பார்வைக்குழு அமைக்கப்பட்ட பிறகு, அதன் முன்னிலையில்தான் மதகுகளை இறக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு குறுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறுவது, எதை வைத்து கூறுகிறார் என்பது வியப்பாக உள்ளது.

தீர்ப்பில் சொல்லப்படாத நிபந்தனையை இருப்பதாக கருதிக்கொண்டு முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்கும் பணியை இனியும் தள்ளிப் போடுவது, மீட்க முடியாத பேரிழப்பை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்திவிடும். எனவே காலதாமதம் செய்யாமல் முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்கி ஆணையிட்டும், அணையின் பாதுகாப்பு பணியை மீண்டும் தமிழக காவல்துறையிடம் மீட்டுக்கொள்ளவும் முதல்வரை தமிழக உழவர் முன்னணி கேட்டுக்கொள்கிறது என அறிக்கையில் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.