பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் 2 பேர் மாநில அளவில் இரண்டாம் இடமும், ஒரு மாணவி மாநில அளவில் மூன்றாமிடமும் பெற்றுள்ளார்.
சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.கிருபா, ஜி.சுபாஷினி ஆகிய இருமாணவியர்களும் தலா 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடமும், மாணவி டி.நித்யஸ்ரீ 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவி கே.கிருபா தந்தை பி.கலைவாணன் அண்ணாமலைப் பல்கலையில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் இன்ஸ்டிரக்டராக பணியாற்றுகிறார். தாயார் மல்லிகா வல்லத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை ஆசிரியையாக உள்ளார். மாணவி கிருபாவின் சகோதரர் சந்தோஷ் சென்னை ஆர்.எம்.டி இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 99, ஆங்கிலம்-99, கணிதம்- 100, அறிவியல்-100, சமூகஅறிவியல்-100. அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவி கே.கிருபா தெரிவித்தது: ஐஐடி இன்ஜினியராக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. பள்ளி நிர்வாகத்தினரும், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் அளித்து ஊக்கத்தால் நன்றாக படித்தேன். இவ்வளவு மதிப்பெண்கள் வரும் என எதிர்ப்பார்க்கவில்லை. கடவுளின் ஆசியினால் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளேன் என்றார்.
மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவி ஜி.சுபாஷினி தந்தை ஆர்.கணேசன் அண்ணாமலைப் பல்கலையில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றுகிறார். தாயார் ஜி.சுஜாதா அண்ணாமலைப் பல்கலைக்கழ தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் மூத்த உதவியாளராக பணியாற்றுகிறார். மாணவி சுபாஷினி சகோதரர் நிர்மலா பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலுகிறார். இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 98, ஆங்கிலம்- 100, கணிதம்-100, அறிவியல்- 100, சமூகஅறிவியல்-100. அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஜி.சுபாஷினி தெரிவித்தது: பிளஸ்டூவில் பயலாஜி குரூப் எடுத்து படித்து எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை. நான் எப்பாவது டிவி பார்ப்பேன். அம்மா, தம்பி நான் படிக்க உதவினார்கள். பள்ளியில் சிஸ்டர் மற்றும் முதல்வர், ஆசிரியர்கள் எனக்கு மிகவும் ஊக்கமளித்தால் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது என்றார்.
மாநில அளவில் 3-ம் இடம் பிடித்த மாணவி டி.நித்யஸ்ரீ தந்தை எஸ்.திருமாறன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார். தாயார் தையல்நாயகி இந்தியன்வங்கியில் பணியாற்றுகிறார். இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-98, ஆங்கிலம்- 99, கணிதம்-100, அறிவியல்- 100, சமூகஅறிவியல்-100. இதுகுறித்து மாணவி டி.நித்யஸ்ரீ தெரிவித்தது: பிஇ ஏரோநாட்டிகல் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை. எனது பெற்றோர் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொடுத்து படிக்க மிகவும் உதவி செய்தனர். பதற்றமாக இருந்த என்னை மிகவும் ஊக்கமளித்தனர். பள்ளியில் பல தேர்வுகள் நடத்தியது அதிக மதிப்பெண்கள் பெற உதவியாக இருந்தது என்றார்.
மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவியர்களை பள்ளி நிர்வாகி அலங்காரம், தலைமை ஆசிரியை சில்வாபிரவுன், உதவித்தலைமை ஆசிரியை பென்னி லில்லி புஷ்பம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.