பாஜக வேட்பாளர்களுக்கு ஆளும்கட்சியினரால் தொடர்ந்து மிரட்டல்: தமிழிசை சௌந்திரராஜன்

பாஜக வேட்பாளர்கள் ஆளுங்கட்சியினரால் மிரட்டப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது என்று, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தார்.கடலூரில் செய்தியாளர்களிடம் அவர்
Updated on
1 min read

பாஜக வேட்பாளர்கள் ஆளுங்கட்சியினரால் மிரட்டப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது என்று, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தார்.கடலூரில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தலைப் பொருத்தவரை அதிமுக பணபலத்தில் போட்டியிடுகிறது. ஆனால் எங்களது தேசிய ஜனநாயக கூட்டணி மனபலத்தில் போட்டியிடுகிறது. மொத்தத்தில் பணபலத்துக்கும் மனபலத்துக்கும் இடையில் நடைபெறும் தேர்தல் இது.பாஜக வேட்பாளர்கள் ஆளுங்கட்சியினரால் மிரட்டப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தால் அவர்களும் அரசியல் கட்சியினர் போலவே நடந்து கொள்கின்றனர். எனவே நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.

தமிழகத்தில் தற்போதுள்ள அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, தேர்தலைப் புறக்கணித்துள்ள அனைத்துக் கட்சியினரும் எங்களுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.இப்போது நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்டதாகும். இதனை மக்கள் உணர்ந்துள்ளனர்,  மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், ஜனநாயகத்தை நிலைநாட்ட எல்லா கட்சியினரும், பொதுமக்களும் ஓரணியில் திரளுவார்கள். இந்த தேர்தல் ஒரு திருப்பு முனையாக அமையும். தமிழகத்தில் பாஜக மாற்றுசக்தியாக உருவெடுக்கும்.

மக்கள் பணியை கவனிக்காமல் தெரு, தெருவாக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் முகாமிட்டு தேர்தல் பணியாற்றுகிறார்கள். தமிழகத்தில் மின்சாரம் இல்லை, ஆனால் புதுதில்லியில் நடைபெற்ற மின்துறை அமைச்சர்கள் மாநாட்டுக்கு அந்த துறை அமைச்சர் செல்லவில்லை. அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் இல்லை, ஆனால் அத்துறை அமைச்சர் ஓட்டுக்கொண்டிருக்கிறார். இந்த தேர்தல் திணிக்கப்பட்டதைபோல், அதிமுகவின் அதிகார பலத்தால் வாக்காளர்களும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சுதந்திரமாக மக்கள் ஜனநாயக கடமையாற்ற அனுமதிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் முறைகேடுகள் குறித்து பாஜக மாநில தலைமை, தேசியத்தலைவர் அமித்ஷாவை சந்தித்து விரிவான அறிக்கையை அளிக்க உள்ளது.

கடலூர் நகர்மன்ற தலைவர் பதவியில் அதிமுகவை சேர்ந்தவர் தான் இருந்தார், அவர் உள்கட்சி பிரச்னையால் பதவியை ராஜினாமா செய்தார். அந்த கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால், சில மாதங்களில் தங்களுக்குள் மோதிக்கொண்டு நகர்மன்றத்தை கலைத்துவிடுவார்கள். இதனை மக்கள் உணர்ந்து பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

இதனைத்தொடர்ந்து அவர், கடலூர் மஞ்சக்குப்பம், முதுநகர் பகுதிகளில் கடலூர் நகர் மன்ற தலைவர் பதவி பாஜக வேட்பாளர் துறைமுகம் செல்வத்துக்கு வாக்குசேகரித்து பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com