/

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நீக்குமாறு சோனியாவை சந்தித்து முறையிட வேலூர் மாவட்ட காங்கிரஸார் முடிவு

காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளுக்கு முரணாக செயல்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நீக்குமாறு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா

News image
Updated On :24 ஜூன் 2015, 9:48 am

எம். அருண்குமார்

காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளுக்கு முரணாக செயல்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நீக்குமாறு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளதாக வேலூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒப்புதலின் பேரில் வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுபாளர் பாலவரதன் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளை நியமிóத்து நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.

இந்நிலையில் வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவராக இருந்த ச. பிரபு தலைமையில் பழைய நிர்வாகிகள் ஆம்பூரில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சட்ட திட்டங்களுக்கு முரணாக மாநில தலைவர் இளங்கோவன் செயல்படுகிறார்.   24 மாவட்ட தலைவர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளனர்.  வேலூர் மேற்கு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களுக்கு மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படவில்லை. வேலூர் மேற்கு மாவட்டத்திற்கு பொறுப்பாளராக பாலூர் சம்பத் ஏற்கனவே நியமிக்கப்பட்டார்.  அவர் எப்போது அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் வாணியம்பாடியை சேர்ந்த பாலவரதன் தற்போது வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் நிர்வாகிகளை நியமிக்க காங்கிரஸ் கட்சியின் சட்ட விதிகளில் இடமில்லை.  இவ்வாறான நிலையில் மாநில தலைவர் இளங்கோவனின் ஒப்புதலுடன் மாவட்ட பொறுப்பாளர், நிர்வாகிகளை நியமித்துள்ளது செல்லாது.  ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் தொடர்ந்து செயல்படுவார்கள்.  புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளை நாங்கள் செயல்படவிடமாட்டோம். 

புதிதாக நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்களில் சிலர் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள், சிலர் கட்சியிலிருந்து வெளியேறி வேறு கட்சியில் இணைந்து பிறகு அங்கிருந்து வெளியேறி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள்.  அவ்வாறு நீக்கப்பட்டவர்களும், வெளியேறி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்களையும் இதுவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கட்சியில் அதிகாரபூர்வமாக சேர்த்துக் கொள்ளவில்லை.  புதிதாக வெளியிடப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அங்கீகரிக்கப்பட்ட மாவட்ட தலைவரால் வெளியிடப்படவில்லை.   அதனால் அது செல்லாது. 

வேலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி அழியும் நிலையில் உள்ளது.  நாங்கள் கட்சியை பாதுகாக்க நினைக்கிறோம்.  கட்சி விரோத போக்கிலும், கட்சி விதிமுறைகளுக்கு முரணாக செயல்படும் மாநில தலைவர் இளங்கோவனை நீக்க முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தியை விரைவில் சந்தித்து முறையிட இருக்கிறோம் என ச. பிரபு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.