தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.
தருமபுரியில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மகளிரணி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:-
மதுவால் அதிக அளவு சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன. மேலும், பாலியல் வன்கொடுமைகள், தற்கொலைகள் என மது அருந்துவதால் உயிரிழப்புகள் அதிக அளவில் நிகழ்கின்றன. மது அருந்துவோரின் வயது 30 வயது என்பது கடந்து தற்போது 12 வயது குழந்தைகளும் அருந்துகின்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மதுவை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாய் கொண்டு இலவசங்களை மக்களுக்கு வழங்குகின்றன. மது பழக்கத்தால் ஆண்டுக்கு தமிழகத்தில் 2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதனால் இளம் விதவைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு ரூ.26 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதனை வருகிற நிதியாண்டில் ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இலக்கு என்பது கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், தொழில் ஆகியவற்றை மேம்படுத்து நிர்ணயிக்க வேண்டும். மாறாக, மது விற்பனையை உயர்த்த இலக்கு நிர்ணயிப்பது அழிவை தரும்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.1900 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இந்த தொகையை தொழில், பொருளாதாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றிற்கு பயன்படுத்தியிருந்தால் மாவட்டம் மிகுந்த வளர்ச்சிக்கு பெற்றிருக்கும். எனவே, அரசியல் சாசனம் சட்டத்தின் படி தமிழகத்திலும், அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்றார்.
முன்னதாக, தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், செüமியா அன்புமணி, தருமபுரி மக்களவை தொகுதி முன்னாள் உறுப்பினர்கள் ரா.செந்தில், பாரிமோகன், மாநில துணைப் பொதுச் செயலர் அ.சரவணன் உள்ளிட்டோர் திரளானோர் கலந்து கொண்டனர். இதில், மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.