வேப்பங்குப்பம் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய தினக்கூலி பணியாளர் இறந்ததற்கு காரணமான மின்வாரிய மின்தட ஆய்வாளரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
ஒடுகத்தூரை அடுத்த எடத்தெருவை சேர்ந்தவர் செல்வம் (45). அணைக்கட்டு மின்சார வாரிய அலுவலகத்தில் தினக்கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த ஏப்.25-ம் தேதி அங்குள்ள மின்மற்றி பழுதடைந்துள்ளதாக மின்வாரிய அலுவலகத்திற்கு பொதுமக்கள் சார்பாக புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் மின்மாற்றியை சரிசெய்ய செல்வத்தை, மின்வாரிய மின்தட ஆய்வாளர் (லைன் இன்ஸ்பெக்டர்) ரகு அன்று இரவு அழைத்துச் சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் செல்வம் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது அங்குள்ள மின்மாற்றியில் மின்சாரம் பாய்ந்து இறந்த நிலையில் சடலமாக செல்வம் தொங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. ஆனால் அவரை அழைத்து சென்ற ரகு அங்கு இல்லை. அவர் தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீஸில் புகார் செய்யப்பட்டது.
ஆனால் போலீஸார் அவரை கைது செய்ய நடவடிக்கை ஏதும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அவ்வூர் பொதுமக்கள் வேலூர் - ஒடுக்கத்தூர் சாலையில் திங்கள்கிழமை ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரகுவை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஓரிரு நாட்களில் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி கூறியதின் பேரில் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.