அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நெல்லை வரதராஜபெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருநெல்வேலி சந்திப்பு அருகே மேலவீரராகவபுரத்தில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலில் சித்திரைப் பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மே 2015, 1:07 pm

முத்துகுமார்

திருநெல்வேலி சந்திப்பு அருகே மேலவீரராகவபுரத்தில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலில் சித்திரைப் பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியில் மிகவும் பழைமை வாய்ந்த வைணவத் தலத்தில் ஒன்றான அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலில் கடந்த 2013இல் புதிய ராஜகோபுரம், மஹா மண்டபம் கட்டப்பட்டு மஹா ஸம்ப்ரோஷணம் நடைபெற்றது. இதன்பின்பு 120 ஆண்டு பழைமை வாய்ந்த திருத்தேர் பழுதடைந்ததால் புதிய தேர் வடிவமைக்க பக்தர்கள் முடிவு செய்தனர். 32 அடி உயரமும் 14 அடி அகலமும் உள்ள இந்த திருத்தேர் பணிகள் முடிந்து கடந்த வாரத்தில் வெள்ளோட்டம் நடைபெற்றது. புதிய தேரில் 52 தூண்களும், 6 சக்கரங்களுடன் 5 அடுக்கு அதிர்ஷ்டானமும், 340 சிற்பங்களும், 4 குதிரைகளும் பொலிவுடன் உள்ளன.

தொடர்ந்து ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், மகாதீபாராதனைகள் நடைபெற்று வந்தன. கடந்த 23 ஆம் தேதி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது. வரதராஜபெருமாள், ராஜகோபாலசுவாமி, கரியமாணிக்கப் பெருமாள், லட்சுமி நரசிங்கப் பெருமாள், சிரீனிவாசபெருமாள், வேதவல்லி தாயார், ஆண்டாள் ஆகியோர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து கருடசேவையும் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்காக காலையில் மலர் அலங்காரத்தில் சுவாமி தேருக்கு எழுந்தருளினார். கோவிந்தா... நாராயணா முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். திருநெல்வேலி மாநகராட்சி மேயர் இ.புவனேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பத்தாம் திருநாளான திங்கள்கிழமை (மே 11) காலையில் ஸநபன திருமஞ்சனமும், நண்பகல் 12 மணிக்கு தாமிரவருணி நதிக்கரையில் சக்ரஸ்நானம் தீர்த்தவாரியும், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடைபெற உள்ளன. பதினோறாம் திருநாளான செவ்வாய்க்கிழமை (மே 12) காலை 9 மணிக்கு கந்தப்பொடி உற்சவமும், பெருமாள் வெள்ளி தோளூக்கினியனில் உலாவும் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு புஷ்பயாகம், சாற்றுமுறை கோஷ்டி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு பெருமாள் கைத்தலத்தில் ஆஸ்தானம் சேர்த்தல் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.