சூரத்: ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் அனுமதிக்கவில்லை என்று கூறியதற்காக, பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, குஜராத் மாநிலம், சூரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களவையில் பாஜக கூட்டணிக்கு 330-க்கும் அதிகமான எம்.பி.க்கள் உள்ளனர். பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரே, மக்களவைத் தலைவராகவும் உள்ளார். இத்தகையச் சூழலில், மக்களவையில் மோடி பேசுவதை யாரால் தடுக்க முடியும் எனத் தெரியவில்லை.
நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்காமல் ஓடி ஒளியும் பிரதமரை இந்தியா பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம், அவர் நாட்டின் மிகப்பெரிய கோயிலான நாடாளுமன்றத்தை அவமதித்து வருகிறார். இதற்காக, நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
விவசாயிகளின் விளைபொருள்களுக்கு 50 சதவீத லாபம் கிடைப்பது உறுதிசெய்யப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றத் தவறிவிட்டார். அதுமட்டுமன்றி, அவர்கள் கடனுதவி பெற முடியாமல், நாடு முழுவதும் உள்ள 370 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 93,000 கூட்டுறவு கடன் வழங்கும் சங்கம் ஆகியவற்றை முடக்கி வைத்து விட்டார் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.