பயங்கரவாதச் செயல்களுக்காக பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும்: வங்கதேசம் வலியுறுத்தல்

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, அவர்களது நாசவேலைகளை ஆதரித்து வரும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த
Updated on
1 min read

கொல்கத்தா: பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, அவர்களது நாசவேலைகளை ஆதரித்து வரும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்று வங்கதேசம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கொல்கத்தாவில் பிடிஐ செய்தியாளரிடம் வங்கதேச உள்துறை அமைச்சர் அஸாதுஸ்ஸமான் கான் கமால் கூறியிருப்பதாவது:
பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் எப்போதும் ஊக்குவிக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த அமைப்பினர் பிற நாடுகளில் புரியும் நாசவேலைகளை ஆதரிக்கிறது.
உலக நாடுகளை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை ஆதரிப்போர் யாராக இருந்தாலும் (பாகிஸ்தான்) அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என நாங்கள் கருதுகிறோம்.
பயங்கரவாதத்தை ஒழிக்கவும், அந்த அமைப்பினரின் சதித் திட்டங்களை முறியடிக்கவும் இந்தியா மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் வங்கதேசம் ஆதரவு அளிக்கும்.
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவும், வங்கதேசமும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இரு நாடுகளும் தொடர்ந்து உளவுத் துறை தகவல்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றன.
இந்திய உளவுத்துறை அமைப்புகளிடம் இருந்து எந்த ஒரு தகவல் கிடைத்தாலும், அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்திய தேசியப் புலனாய்வு அமைப்பும் (என்ஐஏ), வங்கதேச புலனாய்வு அமைப்புகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன.
பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம். எங்கள் மண்ணில் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறுவதை அனுமதிக்க மாட்டோம்.
விரைவில் தீஸ்தா ஒப்பந்தம்: இந்தியாவுடனான தீஸ்தா நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தமானது வருங்காலத்தில் கையெழுத்தாகும் என்று நம்பிக்கை உள்ளது. இரு நாடுகளின் பரஸ்பர நல்லுறவின் அடிப்படையில்தான் எந்த ஒரு ஒப்பந்தமும் ஏற்படுத்தப்படுகிறது.
இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளின் எதிர்காலம் தீஸ்தா நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தை சார்ந்து இருக்காது.
தீஸ்தா ஒப்பந்தத்தை முன்னிறுத்தி, எதிர்க்கட்சிகளும், அடிப்படைவாதிகளும் வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்த முயல்கின்றனர்.
மியான்மரில் தங்கள் மீதான தாக்குதல்களில் இருந்து தப்பிக்க ரோஹிங்க்யா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்கு அகதிகளாக வருவது கடந்த இரு மாதங்களாக அதிகரித்துள்ளது.
எனினும் அவர்களுக்குத் தேவையான உணவு, உறைவிடம் ஆகியவற்றை வழங்கி வருகிறோம்.
மியான்மரில் அவர்கள் கொல்லப்பட்டாலும் சரி, தாக்கப்பட்டாலும் சரி நாங்கள் எங்கள் எல்லையைத் திறந்து வைப்பதுதான் இந்தப் பிரச்னைக்கு தீர்வா?
ரோஹிங்க்யா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக சர்வதேசக் கருத்து உருவாக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com