விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 125 பள்ளிகளில் படிக்கும் 9748 மாணவ மாணவியருக்கு அரசின் விலையில்லா பொருட்கள் பள்ளி தொடங்கும் நாளே வழங்கப்பட்டது.
இதற்கான தொடக்க விழா நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கி.சீனிவாசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கோ.விஜயலட்சுமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ மாணவியருக்கு அரசின் விலையில்லா புத்தகம், நோட்டு, கிரையான், வண்ண பென்சில், சீருடை முதலியவற்றை வழங்கி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கி.சீனிவாசன் பேசுகையில் கூறியதாவது:
அரசு உத்தரவுப் படி ஏப்ரல் மாத இறுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் 12 வழித்தடங்கள் வழியே அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசின் விலையில்லா பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.
தற்போது பள்ளி தொடங்கும் நாளே அவை மாணவ மாணவியருக்கு வழங்கும் பணி சரகத்தில் உள்ள 125 பள்ளிகளிலும் நடைபெற்றுள்ளது. இதனால் 9748 மாணவ மாணவியர் பயன் பெற்றுள்ளனர் என்றார் அவர்.