ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற வகையில் செயல்பட்ட பள்ளிக்கு எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததையடுத்து வருவாய்துறையினர் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், என்.ஜி.ஓ.ஓ. காலனியில் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியை வட்டாட்சியர் சரஸ்வதி, நகர் நல அலுவலர் டாக்டர் மா.சரோஜா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது பள்ளியில் உள்ள கழிப்பறைகளில் நீர் தேங்கி, சுகாதாரமற்ற முறையில் கொசு உற்பத்தியாகி இருந்தது.
மேலும் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் முறையாக அமைக்கப்படாமல், தொட்டி மூடப்படாமல் கொசு உற்பத்தியாகியிருந்தது. இதனையடுத்து முதல்வர் சுதாகரனிடம் இவற்றை உடனடியாக சீரமைத்து பள்ளி மாணவ மாணவியரை டெங்கு காய்சலில் தொற்றிலிருந்து பாதுகாக்க அறிவுரை வழங்கியிருந்தனர்.
மீண்டும் பள்ளியை வியாழக்கிழமை வட்டாட்சியர் சரஸ்வதி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தபோது, குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமல் இருந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்தின் அறிவுரையின் பேரில் பள்ளிக்கு வட்டாட்சியர் சரஸ்வதி ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதத் தொகையைக் கட்டிய பள்ளி நிர்வாகம் குறைபாடுகளை சீர்செய்து விட்டதாய் வட்டாட்சியர் சரஸ்வதி தெரிவித்தார்.