பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, குடியரசுத் தலைவர் ஆவதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜுலை மாதத்துடன் தற்போதைய குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளநிலையில், அடுத்த குடியரசுத் தலைவர் தொடர்பில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வது குறித்து பிரதமர் மோடி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை மார்ச் 29ம் தேதியன்று தமது இல்லத்தில் விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இக்கூட்டத்தின் போது இதற்கான முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அடுத்த குடியரசுத் தலைவராக அத்வானி தேர்வு செய்யப்பட்டால் தனக்கு மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார். மேலும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் போன்றோர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தனக்கு சம்மதமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.