ஹோண்டுராஸ் கடற்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு
ஹோண்டுராஸ் கடற்கரை பகுதிகளில் இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டின் கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 7.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது நடுக்கடலில் 10 கி.மீட்டர் ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் வீடுகள் குலுங்கின. கியூபா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு இரவு நேரம் என்பதால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
ஹோண்டுராஸ் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஜமைக்கா, மெக்ஸிகோ, ஹோண்டூராஸ், கியூபா உள்ளிட்ட பிரிட்டிஷ் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம், ஹோண்டுராஸ் கடலில் சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் அதிக நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாக ஹோண்டுராஸ் கடற்கரை பகுதியும் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கத்தால் குறைந்தது ஒரு மீட்டர் உயரத்துக்காவது கடல் அலைகள் எழும்பும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியே உத்தரிவிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வளைகுடா நாடுகள் மற்றும் கிழக்கு கடற்பகுதியில் உள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
2010-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட இது சக்திவாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.