கவுகாத்தி: அசாமில் மீன்களை பதப்படுத்த பார்மலின் ரசாயனம் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆந்திரா மற்றும் இதர மாநிலங்களில் இருந்து மீன்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளது அம்மாநில அரசு
ஆந்திராவில் இருந்து அசாமில் விற்பனைக்கு இறக்குமதியாகும் மீன்களில் பார்மலின் எனப்படும் ஒரு விதமான ரசாயனம் கலந்திருப்பது அசாம் அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அம்மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பிஜுஷ் ஹசிகா கூறுகையில், இறந்த மீன்களைக் காப்பாற்றுவதற்காக மீன்களின் மீது பார்மலின் பயன்படுத்தப்பட்டுள்ளது கவுகாத்தி மீன் சந்தையில் இருந்து சேகரித்த மீன்களை சோதனை செய்ததன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற பார்மலின் செய்யப்பட்ட மீன்களை வாங்கி உண்ணும் மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் என்பதால், ஆந்திரா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விற்பனைக்கு இறக்குமதியாகும் மீன்களுக்கு 10 நாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
அரசின் தடை உத்தரவை மீறி மீன்களை விற்பனை செய்வோருக்கு சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் எனக் கூறினார்.
மேலும், மீன் சந்தையில் உள்ளூர் மீன்களை மட்டுமே விற்பனை செய்ய வியபாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அசாமில் மீன் சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான மீன்கள் ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பார்மலின் கலந்த மீன்களை உண்பதால் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் என்ற தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.