நீட் தேர்வில் தோல்வி: தில்லி மாணவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் தில்லியைச் சேர்ந்த மாணவர் பர்ணவ் மெகந்திரதா 8-வது மாடியில்
நீட் தேர்வில் தோல்வி: தில்லி மாணவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
Updated on
1 min read

புதுதில்லி: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் தில்லியைச் சேர்ந்த மாணவர் பர்ணவ் மெகந்திரதா 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 6-இல் நடைபெற்றது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 13.26 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் 16.49 சதவீதம் பேர் அதிகமாக விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்களில் 12 லட்சத்து 69, 922 பேர் தேர்வை எழுதினர். 

அவர்களின் நீட் தேர்வு முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று திங்கள்கிழமை பிற்பகலிலேயே முடிவுகள் வெளியிடப்பட்டன. 

உயிரியல்-வேதியியல்-இயற்பியல் என மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடைபெற்ற தேர்வில் 691 மதிப்பெண் பெற்று பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் 99.99 சதமானம் ("பெர்சன்டைல்') மதிப்பெண்ணைப் பெற்றுள்ளார். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ரோகன் புரோஹித் என்ற மாணவரும், தில்லியைச் சேர்ந்த ஹிமான்சூ ஷர்மா என்ற மாணவரும் 690 மதிப்பெண்ணைப் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

தேர்வெழுதிய மாணவர்களில் 7 லட்சத்து 14,562 மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய திருநங்கை மாணவி தேர்ச்சிபெற்றுள்ளார். 

மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு கொண்டு வந்தது முதல் மாணவர்களின் மருத்து படிப்பு கனவை தகர்த்து வருவதால் மாணவ, மாணவிகளின் உயிர்பலி தொடர்கிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு அனிதா, நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டு விழுப்புரம் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இந்நிலையில், தில்லி துவாரகா செக்டார் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த பிரணவர் மகேந்திரதா(19) என்ற மாணவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியாத விரக்தியில் பிரணவ் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மாணவரின் அறையில் கிடைத்த கடிதத்தில், ‘இன்று வெளியான தேர்வு முடிவுகளில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். ஆனால், இதை மறைத்து என் பெற்றோர்களிடம் பொய்கூறிவிட்டேன்’ என எழுதியிருந்ததாகவும், அவரது அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டா ஒன்று கட்டித் தொங்கிக்கொண்டிருந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com