/

பத்திரிகையாளர் சுஜாத் புகாரி கொலை: கொலையாளிகள் மூன்று பேரின் சிசிடிவி போட்டோ வெளியானது

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மூத்த பத்திரிகையாளரும், ரைசிங் காஷ்மீர்' பத்திரிகை ஆசிரியருமான சுஜாத் புகாரி (53) , மற்றும் அவரது

News image
Updated On :30 ஜனவரி 2024, 3:56 pm

PTI

 
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மூத்த பத்திரிகையாளரும், ரைசிங் காஷ்மீர்' பத்திரிகை ஆசிரியருமான சுஜாத் புகாரி (53) , மற்றும் அவரது பாதுகாவலர்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகள் 3 பேரின் சிசிடிவி படங்களை வெளியிட்டு, மக்களின் உதவியை கேட்டுள்ளது காஷ்மீர் காவல்துறை. 

லால்சௌக் பகுதியில் உள்ள பத்திரிகை அலுவலகத்தில் இருந்து வியாழக்கிழமை இப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுஜாத் புகாரி காரில் புறப்பட்டார். அப்போது புகாரியுடன், அவரது பாதுகாவலர்கள் இருவரும் காரில் இருந்தனர்.

அப்போது, பத்திரிகை அலுவலகத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த மூன்று பயங்கரவாதிகள், சுமார் 7 மணியளவில் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் புகாரி இருந்த காரை நோக்கி சரமாரியாக சுட்டனர். காரைத் துளைத்துக் கொண்டு குண்டுகள் பாய்ந்தன. இதில் புகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த பாதுகாவலர்களில் ஒருவரும் பலியானார். மேலும், ஒரு பாதுகாவலர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Story image

துப்பாக்கியில் சுட்ட மர்ம நபர்கள், அங்கிருந்து மோட்டார் சைக்களில் தப்பியோடிவிட்டனர். அவர்கள் வெகுநாள்கள் சுஜாத் புகாரின் நடவடிக்கைகளை கண்காணித்து, கொலை சம்பவத்தை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி நிலவ வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பல்வேறு மாநாடுகளை புகாரி ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார். இதற்கு முன்பு, முன்னணி ஆங்கில நாளிதழில், காஷ்மீர் மாநில செய்தியாளராக அவர் பணியாற்றியுள்ளார். சுஜாத் புஹாரியின் சகோதரர் அகமது புஹாரி, மாநில அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீஸார், தற்போது சிசிடிவி கேமாராவில் பதிவான கொலையாளிகள் ஆண்கள் 3 பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதில் 3 பேர் உள்ளனர். இருசக்கர வாகனம் ஓட்டும் நபர் தலைகவசம் அணிந்துள்ளார். தாக்குதல் நடத்திய மற்ற இருவர் முகமூடி அணிந்துள்ளனர். அவர்கள் வைத்திருக்கும் பையில் துப்பாக்கி இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 

கொலையாளிகளை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களை போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். 

கொலையாளிகள் குறித்து தகவல் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். அவர்கள் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படாது என தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.