புல்வாமா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர் (சி.ஆர்.பி.எப்.) பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளில் சிலர் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதனை தொடர்ந்து வீரர்களும் பதிலடியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமுற்றார். தொடர்ந்து சண்டை நடந்து வரும் நிலையில் காயமடைந்த வீரர் வீரமணரம் அடைந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது உள்ளூர் மக்கள் சிலர் ராணுவத்தினர் மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தி உள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு அங்கிருந்து பயங்கரவாதிகள் தப்பியோடி விட்டனர். இதனால் சண்டை முடிவுக்கு வந்துள்ளது.
அவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.