உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 45 நாள்களில் மட்டும் 71 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பாஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 45 நாள்களில் சுமார் 71 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்துப் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டி.கே.சிங் கூறியதாவது: உயிரிழந்த அத்தனை குழந்தைகளும் வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது மருத்துவ அறிக்கைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த மருத்துவமனையில் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து சிகிச்சைக்கு வரும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையில் 200 படுக்கைகள் மட்டுமே உள்ள நிலையில், 450 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். குறைந்த வசதிகள் காரணமாக மருத்துவர்கள் அதிகமான பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் நிலையிலும் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து உயிர்களைக் காப்பாற்றவே தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 60 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவே குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. பின்னர் மூளையழற்சி காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி ஓய்ந்த நிலையில், மீண்டும் 45 நாள்களில் சுமார் 71 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற காலத்தில் மருத்துவமனைகள் மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு உத்தரவாதங்களை அளித்தார். ஆனால், தற்போது அரசு மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் கூட இல்லை என மருத்துவர்கள், பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.